Sunday, September 11, 2011

சூரத் காபி கடை - லியோ டால்ஸ்டாய்

சூரத் காபி கடை - லியோ டால்ஸ்டாய் 

              

ந்தியாவில் உள்ள சூரத் என்ற நகரத்தில் ஒரு காபி கடை இருந்தது. அங்கு நிறைய உலகத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த வழிப்போக்கர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் சந்தித்து உரையாடிக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் ஒரு படித்த பாரசீக ஆன்மிக வாதி அந்த காபி கடைக்கு வந்திருந்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையை- கடவுளின் இயல்பைப் பற்றித் தெரிந்துகொள்வதிலும், அதைப் பற்றிப் படிப்பதிலும் எழுதுவதிலும் கழித்தவர். அவர் கடவுளைப் பற்றி ஏராளமாக சிந்தித்தார், படித்தார், எழுதினார். அதனால் காலப்போக்கில் அவர்  தன்னுடைய நகைச்சுவை உணர்வை இழந்து, மிகுந்த குழப்பவாதியாக மாறி, கடவுளின் தோற்ற இருத்தலில் நம்பிக்கை வைத்திருப்பதைக்கூட நிறுத்திக்  கொண்டார். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட ஷா, பாரசீகத்திற்குள்         அவர் இருப்பதற்கு தடை விதித்தார்.

"முதல் காரணம்' என்பதைப் பற்றி தன் வாழ்நாள் முழுவதும் விவாதம் செய்த அந்த அதிர்ஷ்டமில்லாத ஆன்மிகவாதி தனக்குத் தானே குழம்பிப் போயிருந்தார். தன்னுடைய அறிவையே இழந்து விட்டோம் என்பதைக்கூட புரிந்துகொள்ளாமல் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு அப்படியொரு உயர்ந்த அறிவு என்பது இல்லவே இல்லை என்று அவர் சிந்திக்க ஆரம்பித்தார்.

அவருக்கு ஒரு ஆஃப்ரிக்க அடிமை இருந்தான். அவன் எல்லா இடங்களுக்கும் அவரைப் பின்பற்றி வருவான். அந்த ஆன்மிகவாதி காபி கடைக்குள் நுழைந்தபோது, அந்த அடிமை வெளியிலேயே இருந்துவிட்டான். அவன் கதவுக்கு அருகில், சூரிய வெளிச்சத்தில் ஒரு கல்லின்மீது உட்கார்ந்துகொண்டு தன்னைச் சுற்றிக் கொண்டிருந்த ஈக்களை விரட்டிக்கொண்டிருந்தான். காபி கடைக்குள் இருந்த ஒரு ஸோஃபாவில் உட்கார்ந்த பாரசீக ஆன்மிகவாதி தனக்கு ஒரு கோப்பை "ஓப்பியம்' வேண்டுமென்று கேட்டார். அவர் அதைக் குடித்து முடித்தவுடன், "ஓப்பியம்' அவருடைய முளையின் வேலைகளைத் துரிதப்படுத்தியது. அப்போது அவர் திறந்திருந்த கதவு வழியாக தன்னுடைய அடிமையிடம் கேட்டார்:

""சொல்லு... நாசமாப் போன அடிமையே, கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? நீ என்ன நினைக்கிறாய்?''

""அனேகமாக... இருக்கிறார்...'' அடிமை கூறினான். உடனடியாக அவன் தன்னுடைய இடுப்பிற்குள்ளிருந்து மரத்தாலான ஒரு சிறிய சிலையை  எடுத்தான்.

""இவர்தான்...'' அவன் சொன்னான்: ""இந்தக் கடவுள்தான் தான் பிறந்த நாளிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர். எங்கள் நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு மரத்தை வழிபடுவோம். அந்த மரத்திலிருந்து உருவாக்கப்பட்டவர்தான் இந்தக் கடவுள்.''

ஆன்மிகவாதிக்கும் அவருடைய அடிமைக்குமிடையே நடை பெற்ற இந்த உரையாடலை அந்த காபி கடையில் உட்கார்ந்திருந்த மற்ற விருந்தாளிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆன்மிகவாதியின் கேள்விகளைக் கேட்டு வியப்படைந்தார்கள். அதைவிட அதிகமான வியப்பு அந்த அடிமையின் பதிலைப் பார்த்து அவர்களுக்கு உண்டானது.

அவர்களில் ஒருவர் பிராமணர். அந்த அடிமையின் வார்த்தைகளைக் கேட்ட அவர், அவன் பக்கம் திரும்பிக் கூறினார்:

""பரிதாபத்திற்குரிய முட்டாள்! ஒரு மனிதனின் இடுப்புக்குள் கடவுளை வைத்துக் கொண்டு திரிய முடியும் என்று நீ நம்புகிறாயா? அது சாத்தியமா? ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். அவர்- பிரம்மா. அவர் முழு உலகத்தையும்விட மிகவும் பெரியவர். ஏனென் றால் அவர்தான் அதைப் படைத்தவரே. பிரம்மா மட்டுமே ஒரே கடவுள். அவர்தான் பலம் கொண்ட கடவுள். அவர்மீது கொண்ட பக்தியால் உருவாக்கப்பட்ட கோவில்கள் கங்கை நதியின் கரைகளில் இருக்கின்றன. அங்கு அவரின் உண்மையான துறவிகளான பிராமணர்கள் அவர்களை வழிபடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான கடவுளைத் தெரியும். அதே நேரத்தில், அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்தோடிவிட்டன. ஒரு புரட்சிக்குப் பிறகு இன்னொரு புரட்சி என்று பல நடந்தும், துறவிகள் தங்களுடைய நிலையைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம்- பிரம்மா என்ற உண்மையான கடவுள் அவர்களைக் காப்பாற்றி வந்திருக்கிறார்.''

அங்கு அமர்ந்திருந்த ஒவ்வொருவரையும் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் அந்த பிராமணர் பேசினார். ஆனால், அங்கிருந்த ஒரு யூத தரகர் அவருக்கு பதில் கூறினார். அவர் சொன்னார்:


""இல்லை... உண்மையான கடவுளின் ஆலயம் இந்தியாவில் இல்லை. கடவுள் பிராமண ஜாதியைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்ற வும் இல்லை. உண்மையான கடவுள் என்பவர் பிராமணர்களின் கடவுளும் அல்ல. உண்மையில் கடவுள் என்பவர் ஆப்ரஹாம், ஐசக், ஜேக்கப் ஆகியோரின் கடவுள்தான். அவர் யாரையும் காப்பாற்ற வில்லை. அவர் தேர்ந்தெடுத்த ஆட்கள்தான் காப்பாற்றுகிறார்கள். அதாவது- இஸ்ரேலியர்கள். உலகம் ஆரம்பமானதிலிருந்து நம் நாடு அவர்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறது. அவர் நமக்கு மட்டுமே சொந்தமானவர். இப்போது நாம் உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கிறோம் என்றால், இது அவர் நம்மீது நடத்தும் சோதனையே. ஒருநாள் தன்னுடைய மக்கள் எல்லாரையும் ஒன்று திரட்டிக் கொண்டு வந்து ஜெருசலேமில் சேர்ப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். பண்டைய உலகின் ஆச்சரியச் சின்னமான ஜெருசலேமில் இருக்கும் ஆலயத்தின் அழகிய தன்மையுடன், எல்லா நாடுகளையும் ஆட்சி செய்யக்கூடிய அதிகாரம் கொண்டதாக இஸ்ரேல் இருக்கும்.''

இப்படிக் கூறிய அந்த யூதர் கண்ணீர்விட்டு அழுதார். அவர் மேலும் சில விஷயங்களைக் கூற நினைத்தார். ஆனால், அங்கு இருந்த ஒரு இத்தாலிய மத ஊழியர் அவரைத் தடுத்து நிறுத்திவிட்டார்.

""நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அது பொய்.'' அவர் அந்த யூதரைப் பார்த்துக் கூறினார்: ""நீங்கள் கடவுளுக்கு தீங்கு இழைக் கிறீர்கள். மற்ற நாடுகளைவிட உயர்வாக உங்கள் நாட்டை கடவுள் நேசிக்க முடியாது. அது அப்படியே உண்மையாக இருந்தாலும், அதாவது- முன்பு கூறுவதைப்போல அவர் இஸ்ரேலியர்களின் பக்கம்தான் இருக்கிறார் என்றாலும், அவரை அவர்கள் கோபப்பட வைத்து இப்போது ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்கள் கடந்தோடிவிட்டன. தங்களுடைய நாட்டை அழிப்பதற்கு அவரைக் காரணமாக்கி, உலகம் முழுக்க தாங்கள் சிதறிக் கிடக்கும்படி செய்துவிட்டார்கள். அதே நேரத்தில் அவர்களின் நம்பிக்கைகளில் மாற்றங்கள் எதுவும் உண்டாகி விடவில்லை. அவை செத்துப் போய்விட்டன. எங்கோ இங்குமங்குமாக இருக்கின்றன. அவ்வளவு தான். எந்தவொரு தனிப்பட்ட நாட்டிக்கும் கடவுள் முன்னுரிமை அளிப்பதில்லை. அதே நேரத்தில் ரோமில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்திற்குக் கீழே பாதுகாப்பு தேடும் அனைவரையும் அவர் அழைக்கிறார். அந்த தேவாலயத்தின் எல்லைகளைத் தாண்டி ஆறுதல் என்பது எங்கும் கிடைக்கவே கிடைக்காது.''

அந்த இத்தாலியர் இவ்வாறு கூறினார். ஆனால், அங்கு அமர்ந்திருந்த ஒரு ப்ராட்டஸ்டண்ட் பேராசிரியரின் முகம் வெளிறிப் போய்விட்டது.  அவர் கத்தோலிக்க ஊழியரின் பக்கம் திரும்பி கிண்டலாகக் கேட்டார்.

""ஆறுதல் என்பது உங்களின் மதத்தில்தான் இருக்கிறது என்று நீங்கள் எப்படிக் கூறலாம்? வேத நூலில் கிறிஸ்து கூறியபடி மனதாலும் உண்மையாலும் யார் கடவுளுக்கு சேவை செய்கிறார் களோ, அவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள்.''


தொடர்ந்து காபி கடையில் அமர்ந்து குழாய் மூலம் புகைத்துக் கொண்டிருந்த சூரத்தில் இருக்கும் சுங்க அலுவலகத்தில் பணியாற் றிக் கொண்டிருக்கும் துருக்கியைச் சேர்ந்த ஒரு அதிகாரி உயர்வு மனப்பான்மையுடன் அந்த இரண்டு கிறிஸ்துவர்களின் பக்கமும் திரும்பினார்.

""உங்களின் உரோம மதத்தின்மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீண்.'' அவர் சொன்னார்:
""உண்மையான நம்பிக்கையால் ஆயிரத்து இருநுறு வருடங்களுக்கு முன்பே அதையெல்லாம் தாண்டி வந்தாகிவிட்டது. அதாவது முஹம்மதுமீது கொண்ட நம்பிக்கையால்! உங்களால் முடியாது- அதே நேரத்தில் முஹம்மது மீது கொண்ட அந்த உண்மையான நம்பிக்கை ஐரோப்பாவிலும் ஆசியாவிலும்- இன்னும் சொல்லப்போனால் மாறிவிட்டிருக்கும் சீனாவிலும்கூட- எப்படி வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். கடவுள் யூதர்களை வெறுத்து ஒதுக்கிவிட்டார் என்று உங்களுக்கு நீங்களே கூறிக் கொண்டீர்கள். அதற்கு ஆதாரமாக- யூதர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள் என்றும் அவர்களுடைய நம்பிக்கை பரவவில்லை என்றும் இருக்கக் கூடிய உண்மையைக் கூறினீர்கள். அப்படியென்றால், முஹம்ம தனிஸம் என்ற உண்மைதான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதையும், அது தூர இடங்களிலும்கூட பரவிக் கொண்டிருக்கிறது என்பதை யும் ஒத்துக்கொள்ளுங்கள். கடவுளின் சமீபத்திய தூதரான முஹம்மதுவைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே காப்பாற்றப் படுவார்கள். அவர்களைத் தவிர, வேறு யாருமே காப்பாற்றப்பட மாட்டார்கள். அவர்களில் அலியைப் பின்பற்றுபவர்கள் அல்ல- உமரைப் பின்பற்றுபவர்கள்தான் காப்பாற்றப்படுவார்கள். அலியைப் பின்பற்றுபவர்கள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள்.''


அதற்கு அலியின் பிரிவைச் சேர்ந்த பாரசீக ஆன்மிகவாதி பதில் கூற விரும்பினார். அதற்குள் அங்கிருந்த பல்வேறு நம்பிக்கை களையும் கொள்கைகளையும் கொண்ட வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த மனிதர்களுக்கிடையே ஒரு மிகப்பெரிய சண்டை உண்டாகி விட்டிருந்தது. அபிஸினியன் கிறிஸ்துவர்கள், திபெத்திலிருந்து வந்திருந்த லாமாக்கள், இஸ்மாயிலைப் பின்பற்றுபவர்கள், நெருப்பை வழிபடுபவர்கள் என்று பலரும் அங்கு இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் கடவுளின் இயல்பைப் பற்றியும் அவரை எப்படி வழிபடுவது என்பதைப் பற்றியும் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய நாட்டில் மட்டும்தான் உண்மையான கடவுள் இருக்கிறார் என்றும், அங்கு மட்டுமே ஒழுங்கான முறையில் அவர் வழிபடப்படுகிறார் என்றும் கூறினார்கள்.

சீனாவைச் சேர்ந்த ஒரு கன்ஃபூஸியஸ் மாணவனைத் தவிர, அங்கிருந்த ஒவ்வொருவரும் விவாதம் செய்வதும் உரத்த குரலில் சத்தம் போடுவதுமாக இருந்தார்கள். அந்த மாணவன் மட்டும் அந்த காபி கடையில் ஒரு மூலையில் அந்த சண்டையில் பங்கே பெறாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அங்கு உட்கார்ந்து தேநீரைப் பருகிக் கொண்டே அவன் அங்கிருந்த மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் எதுவும் பேசவில்லை.
அங்கு அமர்ந்திருந்த அவனை கவனித்த துருக்கி நாட்டைச் சேர்ந்த மனிதர் அவனிடம் கூறினார்.

""நான் கூறியதைப் பற்றிய உன் முடிவைச் சொல், என் இனிய சீன நாட்டைச் சேர்ந்த நண்பரே! நீங்கள் அமைதியாக இருங்க. அதே நேரத்தில் நீங்கள் வாய் திறந்து பேசினால், என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்வேன். உதவி தேடி என்னைத் தேடி வரும் உங்கள் நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் என்னிடம் கூறுவார்கள்- சீனாவில் பல மதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், சீனாக்காரர்களான நீங்கள் முஹம்மதனிஸம்தான் மற்ற எல்லா மதங்களையும்விட சிறந்தது என்று ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றும், அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்றும். என் வார்த்தைகள் உண்மையா என்பதைப் பற்றிய உங்களின் முடிவைக் கூறுங்கள். உண்மையான கடவுளைப் பற்றியும், அவருடைய தூதர்களைப் பற்றியும் உள்ள உங்களின் கருத்தை எங்களிடம் கூறுங்கள்.''

""உண்மைதான்...'' மற்றவர்கள் சீனாவைச் சேர்ந்த மாணவன் பக்கம் திரும்பினார்கள்: ""இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொள்கிறோம்.''


கன்ஃபூஸியஸ் மாணவனான அந்த சீனாவைச் சேர்ந்தவன் தன் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் சிந்தித்தான். தொடர்ந்து அவன் கண்களை மீண்டும் திறந்து, தன் கைகளை தான் அணிந்திருந்த ஆடையின் அகலமான கழுத்துப் பகுதிகளில் இருந்து எடுத்து, நெஞ்சின் மீது மடித்து வைத்துக்கொண்டு, கீழ்க்கண்ட வாறு மிகவும் அமைதியான, தாழ்ந்த குரலில் பேசினான்.

""அய்யாமார்களே, மனிதர்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதைத் தடுப்பதே முக்கியமாக ஆணவம்தான். நீங்கள் நான் சொல்வதைக் கேட்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், நான் உங்களுக்கு ஒரு கதையைக் கூறுகிறேன். இந்தக் கதை ஒரு உதாரணத்துடன் உங்களுக்கு விளக்கிக் கூறும்.

நான் உலகத்தையே சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஆங்கிலேயர் களின் நீராவிப் படகில் சீனாவிலிருந்து வந்தேன். நாங்கள் நல்ல நீருக்காக படகை, சுமத்ரா தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் நிறுத்தினோம் அது மதிய நேரம். எங்களில் சிலர் கடற்கரையில் இருந்த தென்னை மரங்களுக்கு அடியில் உட்கார்ந்திருந்தார்கள். அது ஒரு சிறிய கிராமத்திற்கு மிகவும் அருகில் இருந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதர்களும் அங்கு இருந்தோம்.
நாங்கள் அப்படி உட்கார்ந்திருந்தபோது, கண் பார்வை தெரியாத ஒருவன் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். சூரியனையே மிகவும் நீண்ட நேரமாகவும் கூர்ந்து கூர்ந்தும் பார்த்துக் கொண்டிருந்த காரணத்தால் அவனுக்கு காணும் சக்தி இல்லாமல் போய்விட்டிருக்கிறது என்பதை பின்னர் நாங்கள் தெரிந்து கொண்டோம். சூரியனிடமிருந்து வெளிச்சம் வருகிறதே... அந்த வெளிச்சத்தைத் தரும் சூரியன் என்றால் என்ன என்பதை அவன் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறான்.

இந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு அவன் நீண்ட நேரத்தைச் செலவிட்டிருக்கிறான். சூரியனையே தொடர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது...

ஆனால், இறுதியாக விளைந்தது- சூரியனின் வெளிச்சம் பட்டுப்பட்டு அவனுடைய கண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டன. அவன் குருடனாகி விட்டான்.

தொடர்ந்து அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: "சூரியனின் வெளிச்சம் ஒரு திரவப் பொருள் அல்ல. அது திரவப் பொருளாக இருந்தால், அதை ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்குள் ஊற்ற முடியும். அது அசையக் கூடிய பொருளாக இருக்கும்- நீரைப்போல, காற்றைப்போல. அது நெருப்பாகவும் இருக்க முடியாது. நெருப்பாக இருந்தால், அதை நீர் அணைத்து விடும். ஆவியை ஒளி ஏற்றக் கூடிய வெளிச்சமும் இல்லை. அதைத் தான் கண்களால் பார்க்க முடிகிறதே? அது திடப் பொருளும் இல்லை. அது நகர்த்தக் கூடியதாக இல்லையே! அதனால் சூரியனின் வெளிச்சம் திரவம் அல்ல, நெருப்பு அல்ல, ஆவியும் அல்ல, திடப் பொருளும் அல்ல... அது- எதுவுமே அல்ல.''

அவன் தனக்குள் விவாதம் செய்தான். எப்போதும் சூரியனையே பார்த்துக் கொண்டிருந்தாலும், அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாலும், இறுதியாக அவன் தன்னுடைய இரண்டு கண்களிலும் பார்க்கும் சக்தியையும் சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து விட்டான். அவன் முழுமையாக கண் பார்வை தெரியாத மனிதனாக ஆனவுடன், சூரியன் தோன்றுவதே இல்லை என்ற முழுமையான முடிவிற்கு அவன் வந்துவிட்டான்.
அந்த கண் பார்வை தெரியாத மனிதனுடன், அடிமை ஒருவன் வந்தான். அவன் தன்னுடைய எஜமானனை தென்னை மரத்தின் நிழலில் உட்காரச் செய்துவிட்டு, தரையிலிருந்த ஒரு தேங்காயை எடுத்து, அதை ஒரு இரவு நேர விளக்காக ஆக்குவதில் ஈடுபட்டான். தேங்காய் நாரிலிருந்து திரியைத் திரித்து, தேங்காயிலிருந்து எண்ணெய்யைப் பிழிந்து சிரட்டையில் ஊற்றி, திரியை அதில் முக்கினான்.

அந்த அடிமை உட்கார்ந்து இதைச் செய்து கொண்டிருந்த போது, கண் பார்வையை இழந்த மனிதன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டே அவனிடம் சொன்னான்.

""அடிமையே! சூரியன் ஒன்ற என்று இல்லவே இல்லை என்று நான் உன்னிடம் கூறினேனே, அதுதானே உண்மை? இப்போது எவ்வளவு இருட்டாக இருக்கிறது என்பதை நீயே பார்க்கிறாய் அல்லவா? எனினும், மக்கள் கூறுகிறார்கள்- சூரியன் என்ற ஒன்று இருக்கிறது என்று. அப்படியென்றால், அது என்ன?''

""சூரியன் என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது.'' அந்த அடிமை. கூறினான்: ""அது என்னுடைய வேலையும் இல்லை. ஆனால், வெளிச்சம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். இங்கு உங்களுக்காக ஒரு இரவு விளக்கை தயார் பண்ணி இருக்கிறேன். இதன் உதவியைக் கொண்டு உங்களுக்கு நான் சேவை செய்ய முடியும். இந்தக் குடிலில் எது இருந்தாலும், என்னால் இதைக் கொண்டு கண்டு பிடித்துவிட முடியும்.''

தொடர்ந்து அந்த அடிமை தேங்காயை எடுத்து, சொன்னான்:


""இதுதான் என்னுடைய சூரியன்.''


அங்கு... அருகில் நடக்க உதவும் கருவிகளுடன் அமர்ந்திருந்த ஒரு முடமான மனிதன் இந்த வார்த்தைகளைக் கேட்டு சிரித்தான்.


""நீ உன்னுடைய வாழ்க்கை முழுவதும் வெளிப்படையாக ஒரு குருடனாக ஆகிவிட்டாய்.'' அவன் கண் பார்வையற்ற மனிதனைப் பார்த்துக் கூறினான்: ""சூரியன் என்றால் என்ன என்பது தெரிய வில்லையென்றால், அது என்ன என்று நான் உனக்கு காட்டுகிறேன். சூரியன் என்பது ஒரு நெருப்புப் பந்து. அது தினந்தோறும் காலையில் கடலுக்குள்ளிருந்து உதயமாகி ஒவ்வொரு மாலை நேரத்திலும் நமது தீவில் இருக்கும் மலைகளுக்குக் கீழே மறைந்து போகிறது. நாங்கள் எல்லாருமே அதைப் பார்த்திருக்கிறோம். உனக்கு பார்க்கும் சக்தி இருந்திருந்தால், நீயும் அதைப் பார்த்திருப்பாய்.''

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மீனவன் சொன்னான்.


""நீ உன்னுடைய தீவைத் தாண்டி வேறு எங்குமே சென்றதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. உனக்கு கால் ஊனமாகிப் போகாமல் இருந்து, நான் ஒரு மீன் பிடிக்கும் படகில் இருப்பதைப் போல நீயும் வெளியே பயணிப்பதாக இருந்தால், உனக்குத் தெரிய வந்திருக்கும்- சூரியன் நம்முடைய தீவில் இருக்கும் மலைகளுக்குப் பின்னால் மறையவில்லை என்று. ஆனால், அது தினமும் காலையில் கடலுக்குள் இருந்து உதயமாகிறது. அதேபோல மீண்டும் ஒரு மாலை நேரத்தில் ஒவ்வொரு இரவிலும் கடலுக்குள் போய் மறைந்துவிடுகிறது. நான் உனக்கு என்ன கூறுகிறேனோ, அது உண்மை. ஏனென்றால், நான் அதை ஒவ்வொரு நாள் காலையிலும் என்னுடைய சொந்தக் கண்களால் பார்க்கிறேன்.''


அப்போது எங்களுடைய குழுவில் இருந்த ஒரு இந்தியர் அவன் பேசிக் கொண்டிருப்பதற்கு இடையில் புகுந்து கூறினார்:

""ஒரு சிந்திக்கக் கூடிய மனிதர் இப்படி முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே என்பதை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு நெருப்புப் பந்து எப்படி நீருக்குள் அணையாமல் போக முடியும்? சூரியன் என்பது ஒரு நெருப்புப் பந்தே அல்ல. ஒரு ஒரு கடவுள். பெயர் தேவா. அவர் எப்போதும் ஒரு சாரட்டு வண்டியில் "மேரு' என்றழைக்கப்படும் பொன்னாலான மலையையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் விஷப் பாம்புகளான ராகுவும்- கேதுவும் தேவாவைத் தாக்கி அவரைச் சாப்பிட்டுவிடும். அந்தச் சமயத்தில் பூமி இருட்டாகிவிடும். கடவுள் திரும்பவும்  வரவேண்டும் என்பதற்காக எங்களுடைய  துறவிகள் வேண்டிக் கொள்வார்கள். அப்போது கடவுள் திரும்பவும் வந்துவிடுவார். உங்களைப்போன்ற எதுவுமே தெரியாத மனிதர்கள்- தங்களுடைய சொந்தத் தீவைத் தாண்டி வேறு எங்குமே செல்லாத வர்கள்தான் சூரியன் தங்களுடைய நாட்டில் மட்டுமே உதித்துக் கொண்டிருக்கிறது என்று கற்பனை பண்ணிக் கொண்டிருக் கிறார்கள்.''

அப்போது எங்களுடன் அங்கு அமர்ந்திருந்த எகிப்து நாட்டுக் கப்பலின் தலைவர் தன்னுடைய பங்கிற்கு கூறினார்:

""இல்லை...'' அவர் சொன்னார்: ""நீங்களும் தவறாகக் கூறுகிறீர்கள். சூரியன் என்பது கடவுளே அல்ல. அது இந்தியாவையும் அதன் பொன்னாலான மலையை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கவில்லை. நான் கருடங்கடல் வழியாக எவ்வளவோ பயணித்திருக்கிறேன். அரேபியாவின் கடற்பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன்... மடகாஸ்கருக்குச் சென்றிருக்கிறேன். பிலிப்பைன்ஸுக்குப் போயிருக்கிறேன். சூரியன் இந்தியாவிற்கு மட்டுமல்ல- முழு பூமிக்கும் வெளிச்சத்தைத் தருகிறது. அது ஒரே ஒரு மலையை மட்டும் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. தூரத்துக் கிழக்கில் அது ஜப்பானின் தீவுகளைத் தாண்டி உதயமாகி தூரத்து... தூரத்து... மேற்கில் இங்கிலாந்தின் தீவுகளையும் தாண்டி மறைகிறது. அதனால்தான் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய நாட்டை "நிப்பான்' என்கிறார்கள். அதற்கு அர்த்தம் "சூரியன் பிறக்கும் இடம்' என்பது. எனக்கு இந்த விஷயங்கள் நன்றாகத் தெரியும். ஏனென்றால் நானே எவ்வளவோ விஷயங்களை நேரில் பார்த்திருக்கிறேன். என்னுடைய தாத்தாவிடமிருந்து எவ்வளவோ விஷயங்களைக் கேட்கவும் செய்திருக்கிறேன். அவர் கடலின் இறுதிப் பகுதிக்கே போய் வந்தவர்.''

அதற்கு மேலும் அவர் ஏதாவது பேசிக் கொண்டிருந்திருப்பார். ஆனால், எங்களுடைய கப்பலில் இருந்த ஒரு ஆங்கிலேய மாலுமி இடையில் புகுந்து கூறினார்:

""வேறு எந்த நாடுமே இல்லை.'' அவர் சொன்னார்: ""சூரியனின் நகர்வுகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது- இங்கிலாந்தைத் தவிர. இங்கிலாந்தில் இருக்கும் எல்லாருக்கும் தெரிந்திருப்பதைப்போல சூரியன் எங்கும் உதயமாவதில்லை. எந்த இடத்திலும் மறைவது மில்லை. அது எப்போதும் பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த விஷயத்தை நாம் உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். காரணம்- நாமே உலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். நாம் எந்த இடத்திலும் சூரியனுடன் மோதவில்லை. இங்கு எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ, அதேபோல நாம் எங்கு சென்றாலும், சூரியன் காலையில் தன்னுடைய முகத்தைக் காட்டுகிறது. இரவில் தன்னைத் தானே மறைத்துக் கொள்கிறது.''

ஆங்கிலேய மனிதர் ஒரு குச்சியை எடுத்து தரையில் வட்டங் களை வரைந்தார். அதன் மூலம் சூரியன் எப்படி பிரபஞ்சத்தில் நகர்கிறது என்பதையும் உலகத்தை எப்படி சுற்றி வருகிறது என்பதையும் விளக்க முயற்சித்தார். ஆனால், அவரால் அதை தெளிவாக விளக்கிக் கூற முடியவில்லை. கப்பலின் பைலட்டைச் சுட்டிக் காட்டியவாறு அவர் சொன்னார்.

""எனக்குத் தெரிந்ததைவிட அதைப் பற்றி இவருக்கு நன்றாகத் தெரியும். இவரால் அந்த விஷயத்தை தெளிவாக விளக்கிக் கூற முடியும்.''

அறிவாளியான பைலட் தன்னைப் பேசுவதற்கு அழைக்கும் வரை பேச்சுக்கள் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந் தார். இப்போது எல்லாரும் அவரையே பார்த்தார்கள். அவர் சொன்னார்:

""நீங்கள் ஒருவருக்கொருவர் தவறான விஷயங்களைக் கூறி உங்களுக்குள்ளேயே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். சூரியன் பூமியைச் சுற்றிச் செல்லவில்லை. ஆனால், பூமிதான் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. போகும்போதே சுற்றிக்கொண்டே செல்லும் அது ஒவ்வொரு இருபத்து நான்கு மணி நேரம் ஆனதும், சூரியனை நோக்கித் திரும்புகிறது. ஜப்பான், பிலிப்பைன்ஸ், இப்போது நாம் இருக்கும் சுமத்ராவில் மட்டுமல்ல- ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, இன்னும் இருக்கும் எல்லா நிலப் பகுதிகளி லும்... சூரியன் ஒரு குறிப்பட்ட மலைக்காக மட்டும் ஒளி தருவதில்லை. அதேபோல ஒரு குறிப்பிட்ட தீவுக்காகவும் அல்ல... ஒரு கடலுக் காகவும் அல்ல... ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்காக மட்டும் அல்ல.... மற்ற எல்லா கோள்களுக்காகவும்போல நம்முடைய பூமிக்காகவும். நீங்கள் உங்களின் சொந்தக் காலடிகள் பதிந்திருக்கும் பூமியைப் பார்ப்பதற்கு பதிலாக மேலே இருக்கும் பிரபஞ்சத்தைப் பாருங்கள். அப்போது இது உங்களுக்குப் புரியும். அதற்குப் பிறகு சூரியன் உங்களுக்காக உதிக்கிறது என்றோ உங்களின் நாட்டிற்காக மட்டுமே உதயமாகிறது என்றோ இன்னொரு முறை கூறவே மாட்டீர்கள்.''

இவ்வாறு பேசிய உலகத்தின் பெரும் பகுதியைச் சுற்றி வந்திருக்கும் அந்த அறிவாளியான பைலட் மேலே இருக்கும் பிரபஞ்சத்தையே நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

""இதுதான் நம்பிக்கை பற்றிய கதைகள்.'' அந்த சீனாவைச் சேர்ந்த, கன்ஃபூஸியஸ் மாணவன் தொடர்ந்து சொன்னான்: ""ஆணவம்தான் மனிதர்களிடையே தவறுகளையும் புரிதலற்ற தன்மைகளையும் உண்டாக்குகிறது. சூரியனுக்கு என்ன பொருந்து கிறதோ, அது கடவுளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு தனிப்பட்ட கடவுள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறான். குறைந்தபட்சம், ஒரு தனிக் கடவுள் தன்னுடைய நாட்டிற்காவது இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். உலகத்தில் இல்லாத ஒரு கடவுளை தன்னுடைய ஆலயங்களுக்குள் மட்டும் சொந்தமாக வைத்திருக்க ஒவ்வொரு நாடும் விரும்புகிறது.

ஒரே நம்பிக்கை, ஒரே மதம் என்று அனைத்து மக்களையும் ஒன்றுசேர்த்து கடவுள் தானே கட்டிய ஆலயத்திற்கு இணையாக வேறு எந்த ஆலயத்தையும் ஒப்பிட முடியுமா?

கடவுளின் சொந்த உலகமான அந்த ஆலயத்தை முன்மாதிரியாக வைத்துதான் எல்லா மனித ஆலயங்களும் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் அதற்கென்று இருக்கக் கூடிய அமைப்புகள், அலங்கரிக்கப்பட்ட மேற்கூரை, அதன் விளக்குகள், அதன் ஓவியங்கள் அல்லது சிற்பங்கள், அதன் எழுத்துகள், சட்டம் பற்றிய நூல்கள், அதன் படையல்கள், அதன் பிரார்த்தனை செய்யும் இடங்கள், அதன் துறவிகள்... ஆனால் எந்த ஆலயத்தில் கடலுக்கு ஒத்த அழகு இருக்கிறது? பிரபஞ்சங்களுக்கு நிகரான மேற்கூரை இருக்கிறது? சூரியன், நிலவு, நட்சத்திரங்களுக்கு நிகரான விளக்குகள் இருக்கின்றன? அல்லது வாழ்வதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனிதர்களுக்கு நிகராக ஒப்பிட்டுக் கூறுவதற்கு யார் இருக்கிறார்கள்? மனிதர்கள் சந்தோஷ மாக இருக்க வேண்டும் என்பதற்காக கடவுள் பொழியக்கூடிய ஆசீர்வாதங்ளை எளிதாகத் தெரிந்துகொள்கிற மாதிரி- கடவுளின் கருணை யைக் காட்டும் ஆதாரங்களுக்கு நிகராக வேறெதுவும் இருக்கின்றனவா? ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எழுதப் பட்டிருப்பதற்கு நிகரான- தெளிவான சட்டம் பற்றிய நூல் எங்கு இருக்கிறது?

தன்னலமே இல்லாமல் ஆணும் பெண்ணும் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பிற்கு நிகரான தியாகங்களை எங்கே பார்க்க முடியும்? கடவுளே ஏற்றுக்கொள்ளக்கூடிய தியாகங்களைச் செய்யும் நல்ல மனிதனின்  இதயத்திற்கு நிகராக வேறு எந்த ஆலயத்தை ஒப்பிட்டுக் கூற முடியும்?

ஒரு மனிதனின் கடவுளைப் பற்றிய கற்பனை எந்த அளவிற்கு உயர்ந்ததாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவனுக்கு கடவுளைப் பற்றி நன்கு தெரியும். அவன் எந்த அளவிற்கு கடவுளைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறானோ, அந்த அளவிற்கு அவன் கடவுளை நெருங்கிவர முடியும். கடவுளுடைய நல்ல செயல்களை, அவருடைய கருணையை, அவர் மனிதர்கள்மீது கொண்டிருக்கும் அன்பை அவன் பிரதிபலிக்க முடியும்.


அதனால், உலகத்தையே வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் சூரியனின் முழு ஒளியையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதன், அந்த விளக்கின் ஒரு கீற்றை தான் வழிபடும் சிலையில் பார்க்கும் மூடத்தனமான மனிதனைக் குறை சொல்லவோ ஒதுக்கவோ கூடாது. சொல்லப்போனால்- கண் பார்வை இல்லாத, சூரியனைப் பார்க்க முடியாத, நம்பிக்கையற்ற மனிதனைக்கூட இழிவாக எண்ணக்கூடாது.''


இவ்வாறு சீனாவைச் சேர்ந்த கன்ஃபூஸியஸ் மாணவன் பேசினான். அந்த காபி கடையில் அமர்ந்திருந்த எல்லாரும் மிகவும் அமைதியாக இருந்தார்கள். யாருடைய நம்பிக்கை உயர்ந்தது என்று அவர்கள் அதற்குமேல் விவாதம் செய்து சண்டை போடவே இல்லை

No comments:

Post a Comment