Thursday, September 22, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா?

கூடங்குளம் அணு மின் நிலையம் — சில கேள்விகளும் , சில பதில்களும்.

Written on:September 22, 2011
Comments
Add One
நம் நாட்டுக்கு அணு மின் நிலையம் தேவையா?
தேவை ( சில விதிகளுக்கு உட்பட்டு)
கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா?
தேவை இல்லை.
ஏன்?
தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை, இவ்வளவு காசு போட்டு, அரதப்பழசான ரஷியதொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அணுமின் நிலையம் அமைத்துத்தான் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
விளக்கம் ப்ளீஸ்.…
தமிழ்நாட்டின் மொத்த மின்சார உற்பத்தி 10237 MW.
நமக்கு எங்கிருந்து மின்சாரம் கிடைக்கிறது?
  • TNEB க்குச் சொந்தமான மின்நிலையங்கள் மூலம் — 5677 MW
  • தனியார் மின் நிலையங்கள் மூலம் — 1180 MW
  • மாநிலத்தில் இயங்கும் பொதுத்துறை மின்சார நிலையங்கள் மூலம் — 2861 MW
  • தனியார் நிறுவனங்கள் , சொந்த உபயோகத்துக்காக உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உபரியை, மாநிலத்துக்கு விற்பதால் கிடைக்கக் கூடியது — 214 MW
  • மற்றும் பிற (வெளி மாநிலங்களில் வாங்குவது எட்செட்ரா) — 305 MW
ஆனால், இதெல்லாம், மின்சார உற்பத்தி நிலையங்கள் 100% சீராக இயங்கினால் மட்டுமே கிடைக்கும். நடைமுறையில் தோராயமாக 8000 MW என்று வைத்துக் கொள்ளலாம் ( சென்ற ஆண்டு கணக்குப் படி).
ஆக, நம்முடைய உற்பத்தி 8000 MW
தேவை : 10,500 MW — 11,500 MW
பற்றாக்குறை : 2500 MW – 3500 MW
இந்தப் பற்றாக்குறையை கூடங்குளம் அணுமின் நிலையம் மொத்தமாகத் தீர்த்து விடாது. கூடங்குளத்தின் திட்ட அளவு 2000 MW ( அதிலே முதல் கட்டமாக 1000 MW, இன்னும் சில மாதங்களில் இயங்க இருக்கிறது.) இந்த 2000 MW மின்சாரத்தில் நமக்குக் கிடைக்கவிருக்கும் பங்கும் 925 MW மட்டுமே.
அப்படியானால் நம் பற்றாக்குறையை எப்படி ஈடுகட்டுவது?
தற்போது ஏழு பெரிய மின்சார திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன ( கூடங்குளம் திட்டம், கல்பாக்கம் விரிவாக்கத் திட்டம் அடக்கம்) . இவை 2012 இறுதியில் மின்சார உற்பத்தியைத் துவங்கும். இதன் மூலம் நமக்குக் கிடைக்க இருப்பது 4640 MW. இதிலிருந்து கல்பாக்கம், கூடங்குளம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை (925 MW + 167 MW) ஐக் கழித்து விட்டாலும், கிடைக்க இருப்பது, 3548 MW. சில திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்க தாமதமானாலும், உறுதியாக 2500 MW கிடைக்கும்.
இதைத் தவிர, புதிதாக திட்டமிடப்பட்டு ஆனால், கட்டுமானத்துக்கு எடுத்துக் கொள்ளப் படவிருக்கும் திட்டங்கள் 5. இதன் மூலம் 2015 ஆண்டு இறுதியில் கிடைக்க இருக்கும் மின்சாரம் 5600 MW. இதையும் தவிர, அமைச்சகத்தின் அனுமதிக்காக வேண்டி காத்து நிற்கும் பெரிய திட்டங்கள் நான்கு. எல்லாம் ஒழுங்காக இருக்கும் பட்சத்தில், இத்திட்டங்கள் 2013 ஆம் ஆண்டில் பூர்வாங்க வேலைகளைத் துவங்கினால், 2016 ஆண்டு இறுதியில் மின்சார உற்பத்தியைத் தொடங்கும். இதன் மூலமாகக் கிடைக்க இருக்கும் மின்சாரம் 3800 MW.
இவை, அதிகரிக்கும் தேவையையும் சேர்த்து ஈடுகட்டும்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை விட்டால் தமிழ்நாடே இருளில் மூழ்கும் என்கிற கருத்து தவறானது.
கூடங்குளம் எல்லா விதிகளுக்கும் உட்பட்டுத்தான் கட்டப் படுகிறதா?
தனியாரோ, பொதுத் துறையோ, மாநில மின்சார வாரியமோ யாராக இருந்தாலும், மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. எந்த வகை மின்சாரம் ( அனல், நீர், சூரியசக்தி…) என்பதைப் பொறுத்து விதிகள் மாறும், ( யார் அமைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அல்ல) . நிறைய விதிமுறைகள் இருந்தாலும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கான விதிகள் தான் கடுமையானவை. இதிலே முக்கியமானவை இரண்டு.
மின்நிலையம் அமைக்க முடிவு செய்து ( இந்த இடத்திலே கூடங்குளம்) , பூர்வாங்க வேலைகள் முடிந்ததும், அந்தத் திட்டத்தை ( திட்ட மதிப்பு, நில தேவை, சூற்றுச்சூழல் பாதிப்பு, அதற்கான பரிகாரங்கள்: உள்ளிட்ட) , குறிப்பிட்ட for­mat இலே, சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தை, அதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஆராய்ந்து திருத்தங்கள் சொல்லும். திருத்திக் கொண்டு அப்பீல் செய்ய வேண்டும். பிறகு மீண்டும் திருத்தங்கள், இப்படி சில மாதங்கள் ஓடும். ஏழெட்டு வருடமாக, இந்த நிலையிலேயே இருக்கும் மின்சார திட்டங்கள் ( தனியார் & பொதுத்துறை) ஏராளம். ஒரு வழியாக, அவர்களுக்குத் திருப்தி வந்ததும், அதை, மாநில, நிபுணர் குழுவிடம் பரிந்துரைப்பார்கள்.
மாநில நிபுணர் குழு, ஒரு சாங்கியத்துக்கு, மேலிடம் கேட்ட கேள்விகளையே கேட்டுவிட்டு, pub­lic hear­ing என்ற சடங்கு செய்யப் பணிப்பார்கள். pub­lic hear­ing என்பது, எந்த இடத்தில் அந்த மின்நிலையம் கட்டப் பட இருக்கிறதோ, அங்கு வசிக்கும் மக்களை அழைத்து அவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருக்கிறதா என் கேட்கும் ஒரு நடைமுறை. சுற்றுப்புறச் சூழலுக்கு ( அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் உட்பட) பாதிப்பு ஏற்படுத்தும் அனைத்து பெரிய திட்டங்களும் இந்த pub­lic hear­ing நடைமுறையைக் கடந்துதான் வரவேண்டும். pub­lic hear­ing நடப்புகளுக்கு விளக்கம் கேட்க யாரும் வரவில்லை என்றால், சில வழக்குகளில் அளிக்கப்படும் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு போல, யாருக்கும் ஆட்சேபம் இல்லை என்று NOC பெற்று வேலையைத் துவங்கி விடுவார்கள்.
( இந்த வேலைக்கு மொத்தப் பொறுப்பாளியான அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தன் வேலையை சீரியஸாக எடுத்துக் கொண்டு vedanta , Lavasa, Jin­dal, POSCO போன்ற பெருமுதலாளிகளுக்கு இம்சை கொடுத்ததால், அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஜெயந்தியக்காவை அந்த இடத்திலே உட்கார்த்தி வைத்துவிட்டார்கள் என்பது ஒரு கிளைக்கதை )
கூடங்குளம் விவகாரத்தில், இரண்டு யூனிட்டுகள் ( 1000 MW) கொண்ட முதல் கட்டத்துக்கு இந்த pub­lic hearing நடந்ததா, முடிவு என்ன என்பது குறித்து என்னிடம் தகவல்கள் இல்லை. அதே அளவிலான இரண்டாவது கட்டத்துக்கு, திட்ட வரைவு, கடந்த வருட மத்தியில் மத்திய சுற்றுப் புறச் சூழல் அமைச்சகத்துக்குச் சமர்ப்பிக்கப் பட்டு, அது முதல் கட்ட அனுமதியைப் பெற்றது. இரண்டாம் கட்ட அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது.
அணுமின் நிலையம் அமைப்பதிலே செலவு அதிகம் என்கிறார்களே? நிசமாகவா? வேறு சீப்பான வழிகள் என்ன என்ன?
உண்மைதான். அனல் / நீர் மின்சாரம் போல் அல்லாமல், அனல் மின் நிலையத்துக்கு ஏகப்பட்ட முஸ்தீபுகள் செய்ய வேண்டும். மிக அதிக அளவு நிலம் வேண்டும். நுட்பமும், உபகரணங்களும் விலை அதிகம். கூடங்குளம் முதல் கட்டத்துக்கு இது வரை ஆன செலவு சுமாராக 15 ஆயிரம் கோடி ( அனைத்தும் உள்ளிட்டது). அதாவது ஒரு மெகாவாட்டுக்கு 15 கோடி ரூபாய். ஆனால், நிலக்கரி அனல் மின்சாரத்தை , 5 — 5.5 கோடி ரூபாய் / மெகாவாட் என்ற விலையில் உற்பத்தி செய்யலாம். ஆனால், நிலக்கரி மின்சாரத்தின் மூலம் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளும் அதிகம். நிலக்கரி பற்றாக்குறையும் நிலவுகிறது. அரசு மின் நிறுவனங்கள் சட்டீஸ்கார், ஜார்க்கண்ட் ஒரிசா மாநிலங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்களிடம் coal link­age க்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். தனியார்கள், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மின்சார திட்டங்களின் தாமதத்துக்கு நிலக்கரி இருப்புக்குறைவும் ஒரு முக்கியக் காரணம். உலகெங்கும், நிலக்கரி மின்சாரத்தைக் குறைக்க முனைப்பு காட்டுகிறார்கள். ஆனால், நம் நாட்டில் ( உடனடியாக ) முடியாது என்பதால், தீங்கு குறைவான super crit­i­cal technology மூலம் அனல் மின் நிலையங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முறைசாரா எரிசக்தி நம் மின்சாரப் பற்றாக்குறையை தீர்க்க முக்கியமானதொரு வழி.
காற்று மின்சாரம் : நாம் கடந்த ஆண்டு, உற்பத்தி செய்த மின்சாரத்தில் கிட்டதட்ட 4000 MW , காற்றாலை மூலமாக வந்தது. காற்றாலை மின்சாரத்தில், தமிழ்நாடு தான் முன்னோடி. இதிலே, சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. காற்று மின்சாரத்துக்கு அடிப்படைத் தேவையான தட்ப வெப்பச் சூழலை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதோடு, தட்ப வெப்பத்தைக் கணிக்கக் கூடிய நுட்பம் ( wind forecasting) தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளன.
சூரிய சக்தி : இது கொஞ்சம் பரபரப்பாக உள்ளது. இதிலே உள்ள முக்கியமான சிக்கல், உபகரணங்கள், உள்நாட்டில் தேவைப்படும் அளவில் கிடைப்பதில்லை என்பதோடு, விலையும் அதிகம். ஒரு மெகாவாட்டுக்கு குறைந்த பட்சம் 15 கோடி ரூபாய்கள் ஆகும். ஆனால், அரசு அவ்வளவு விலை கொடுத்து மின்சாரத்தை வாங்காது. இந்தச் சிக்கலைக் களையவும், சூரிய மின்சார உற்பத்தியைப் பெருக்கவும், அரசு, ஒரு சலுகை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. குஜராத், ராஜஸ்தான், ஒரிசா போன்ற , solar radiation அதிகமாக உள்ள மாநிலங்கள் ஓரளவு பரபரப்பாக இருந்தாலும், தமிழ்நாட்டில் கொஞ்சம் மந்தம் தான். அரசு சலுகைகள் எல்லாம் இல்லாமல், சூரிய மின்சாரத்துக்கான உபகரணங்களின் விலை குறைந்தாலும், அவற்றின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தாலும், தனியார் இதிலே முதலீடு செய்ய முன்வருவார்கள். ( இன்னும் விளக்கலாம், ஆனால், இந்த மேட்டரின் நோக்கத்துக்கு அப்பாற்பட்டது)
கடலலை மின்சாரம் ( Tidal Power) , geot­her­mal energy போன்றவை இன்னும் R and D லெவலில் தான் இருக்கிறது. நடைமுறைக்கு வந்தாலும், நம் மொத்தத் தேவையில் 1% பங்களிக்கும். அவ்வளவே.
மின்சார விநியோகத்தைச் சீராக்கினாலே அனைத்தும் சீராகும் என்கிறார்களே உண்மையா?
இது முழு உண்மை அல்ல.
கொஞ்சம் அடிப்படையில் இருந்து பார்ப்போம். இந்த மின்சாரக் கட்டமைப்பு மொத்தம் மூன்று படிநிலைகளை உள்ளடக்கியது.
1. Gen­er­a­tion ( உற்பத்தி)
2. Trans­mis­sion ( மின் கடத்தலா?)
3. Distribution ( விநியோகம்) .
மூன்று இடங்களிலுமே சேதாரம் ஏற்படலாம்.
ஒரு 500 MW மின்நிலையம் 90% capac­ity இலே இயங்கினால், வெளியே வருவது 450 MW. உற்பத்தியில் ஏற்படும் சேதாரம். இந்த மின்சாரத்தை, உயர் அழுத்தக் கம்பிகள் மூலம் அங்கங்கே ட்ரன்ஸ்மிஷன் டவர்கள் அமைத்து அரசு மின் வாரிய grid க்கு அனுப்புவார்கள். அங்கங்கே டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து மின்சாரத்தை பார்சல் செய்யும் பொழுது இயல்பாகவே கொஞ்சம் வீணாகும். இது ட்ரான்ஸ்மிஷன் மூலம் ஏற்படும் சேதாரம். grid ஐ வந்தடைந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு அனுப்புவதற்குப் பெயர் விநியோகம். இங்கே திருட்டு மூலம் கொஞ்சம் சேதாரம் ஆகும்.
Aggre­gate Tech­ni­cal & Com­mer­i­cal Loss ( AT &C) என்று இந்த மூன்று வகையான நட்டத்தின் மூலமும், நாம் கடந்த ஆண்டு இழந்தது மொத்த உற்பத்தியில் 18.5 % தான். ஆகவே, இந்தச் சேதாரங்களைத் தவிர்த்தால், எல்லாம் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்பது முழு உண்மை அல்ல.
வேறு என்ன தான் வழி?
Demand Response Management.
நம் மின்சார விநியோகக் கட்டமைப்பு ஒரு வழிப் பாதை. உதாரணமாக, TNEB, தேவைப்படுகிற நேரத்தில், நம் வீட்டு கிரைண்டரிடம் ‘தொடர்பு’ கொண்டு, தேவைப்படும் மின்சாரத்தை அளிக்கும். ஆனால், அந்த மின்சாரம், கிரைண்டர் இயக்கத்தான் பயன்பட்டதா என்பதை என்பதை , TNEB Grid அறிந்து கொள்ளா வாய்ப்பில்லை. மின்சார அளவைக் கணக்கிடும் தற்கால அனலாக் மீட்டர்களுக்கு அத்தனை புத்திசாலித்தனமில்லை.
அப்படி ஒரு வழி இருந்தால்?
நாம் மின்சாரத்தைச் செலவு செய்யும் விதங்களைப் பதிவு செய்யக் கூடிய ஒரு டிஜிடல் மீட்டர் இருந்தால்? ( smart metering)
யார் யாருக்கு எத்தனை மின்சாரம் தேவைப்படும் என்பதை முன் கூட்டியே கணிக்கக்கூடிய தரவுகள் இருந்தால்?
எதெதெற்கு எவ்வளவு, எப்பொழுது மின்சாரம் தேவைப்படும் என்பதை கணிக்க முடிந்தால்?
எந்த ஏரியாவில் லோட் அதிகம் ஆகும், குறையும் என்கிற pattern ஐக் கண்டு பிடிக்க முடிந்தால்?
எந்த இடத்திலே, மின் திருட்டு நடைபெறுகிறது என்பதை உட்கார்ந்த இடத்திலே கண்டு பிடிக்க முடிந்தால்?
குளிர்சாதன வசதிக்கான மின்சாரத்துக்கு இத்தனை விலை, மிக்ஸி இயக்க தேவையான மின்சாரத்துக்கு இத்தனை விலை என்று ( dif­fer­en­tial pricing) என்று நிர்ணயிக்க முடிந்தால்?
தகவல் நுட்பம் துணை கொண்டு இது அனைத்தையும் சாதிக்க முடியும். இதை smart grid என்று சொல்வார்கள். நம் மின்சார விநியோகக் கட்டமைப்பையே, மொத்தமாகக் கலைத்துப் போட்டு புதிதாகச் செய்ய வேண்டும் என்பதால், இதற்கு ஆகக் கூடிய செலவும், கால நேரமும் அதிகம். என்றாலும், அரசு அளவிலும் , தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இதற்கான முனைப்பு துவங்கிவிட்டது. தொலைத் தொடர்பில் புரட்சி செய்த அண்ணன் சாம் பிட்ரோடா வைத் தலைவராகக் க் கொண்டு ஒரு உயர்மட்ட செயல் குழு ஒன்றை உருவாக்கி, சில பைலட் திட்டங்கள் ( பெங்களூருவில்) செய்து கொண்டிருக்கிறார்கள்.
[ இது ஒரு தொலைநோக்குத் திட்டம், இன்றைக்கு திட்டமிட்டு நாளை செயல்படுவதல்ல]
சிம்பிளாக நாலு வரியில் சொன்னாலும், இந்த இயல், மர்மநாவலுக்கு உரித்தான சுவாரசியமும் விறுவிறுப்பும் கொண்டது. இன்னும் விரிவாக எழுதலாம், ஆனால் எந்த டெக்னலாஜியையும் , techcrunch இலே வந்திருக்கிறதா? ஆண்டிராய்ட் / ஐஃபோன் அப்ளிகேஷனாக சுருக்க முடியுமா என்று யோசிக்கிற சூழல் நிலவும் ‘ITcentric’ தருணத்தில், இதுவே அதிகம்.

Sunday, September 18, 2011

ராசிப் பிரசவங்கள் & புராதனத் தொடர்ச்சி -கவிதைகள்

ராசிப் பிரசவங்கள் 
                              
                                    - பத்மநாபபுரம் அரவிந்தன் -

நாள் கிழமைப் பார்த்து

டாக்டருக்குச் சொல்லிவிட்டால் 

கோள் ராசி பயமில்லை....டாக்டரின் 

கத்திக்குள் நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் ...

மிகச் சிறந்த ராசியதில், சுத்த நட்சத்திரத்தில் 

அற்புதமான நாளன்று - அறுவை முறை கலையோடு 

அக் குழந்தை அவதரிக்கும் .. குழந்தை பிறக்கும் நேரம்

இயற்கையின் கை விட்டு கத்திக்கும், காசுக்கும்  கைமாறி 

காலங்கள் ஆகிப் போச்சு..

என்  குழந்தை பிறந்த நாள் இதென்று சொல்லாமல் 

பிறப்பித்த நாள் இதுவென்று சொல்லவேண்டும்..

டாக்டர்கள் இனிமேல் பஞ்சாங்கமும் பயில வேண்டும்...

சோதிடமும் தெரிய  வேண்டும்..  ராகு, கேது, குரு பெயற்சி

தவறாமல் சொல்ல வேண்டும்...

நல்ல நாள் பார்த்து, அறுத்தெடுத்து அத்தனை

சேய்களையும் நாடாளச் செய்ய வேண்டும்..

பிறப்பவை அத்தனையும் நாடாள வந்து விட்டால் 

குடி மக்கள் என்றிங்கு எவர் தான் இருப்பாரோ?   
-------------------------------------------------------------------------------------------------




புராதனத் தொடர்ச்சி 
                                           - பத்மநாபபுரம் அரவிந்தன் -

( 25-09-2011  திண்ணை இணைய இதழில் வெளி வந்தது  )
புராதனச் சம்பவங்கள் புத்தியில் 

படிமமேறி  நிகழ் வாழ்வில் நெளிந்து 

உட்ப்   புகவும்,  வெளி வரவும் முடியாது  

உறக்கமற்ற சூனியத்தை ஒளிப் பிழம்புகளாய்

சுருட்டியள்ள .. நிலை குலைந்து புராதனமனைத்தும்  

துடைத்தெறியும் வெறியில் புதியன பலவும்

படித்தறிந்து புகுத்தி வைக்க எத்தனிக்கும் மனதில்

புதியன எதுவும் புராதனத்துடனே ஒப்பிட்டு நிற்கும்...

தன்னுள்ப் புலம்பும் மனம்...

' புதியனவென்று எதுவும் இல்லை .. எல்லாம்,எல்லாம்

புராதனத்தின் தொடரே.... '

தேடல் & ஒரு கடலோடியின் வாழ்வு - கவிதைகள்...







தேடல்                                        
             -  பத்மநாபபுரம் அரவிந்தன் -

பிஞ்சு மழலையைக்  கொஞ்ச எடுக்கையில் 
தானாய் வழிகிறது கனிவு, மனம் வழி ஊறி
தூக்கும் கை வழி பரவி வியாபிக்கும் அன்பு
கண்கள் பார்க்கையில் நெஞ்சம் நிறைந்து
கசிந்துருகும் காதல் ...   என்  காய்த்த கைதனில்
பூத்த மலரென படுத்திருக்கும் குழந்தை...
சின்னச் சிணுங்கலில் என் மனச் சிறகுகள்
வானோக்கி எம்ப எத்தனிக்கும் ...
விட்டுப் பிரிந்திருந்தும் மனதுள் 
அவள் மேல் வீசும் சோழ தேசத்து
பால் நிறை நெற்பயிர் வயல்வெளி  மணம்....
 மழை  பெய்து பிற்பாடு ஒளி பட்ட மலை போல மின்னும்
அப்பிஞ்சு முகத்தின் கன்னக் கதப்பு
மனக் கண்ணில் மறையாது
எண்ண எண்ண சலிக்காது ..வந்து நின்று போகாது
மனைவி, மகன் மேலிருந்த தேடல் மெல்ல
மகளின் மேல் நகரும் காலம்
தொலைதூரம்   இருந்தாலும்  தொடர்ந்தேதான்  ஆகும் ...
கொடுத்து வந்த முத்தத்தின் மணம் இன்னும் மாறவில்லை
கையசைத்து ,காலசைத்து மெல்லியப் புன்னகையை
எனை நோக்கி வீசியதை மனமுழுக்க சேமித்து
யோசித்து செலவிட்டு கழிக்க வேண்டும் சில நாட்கள்
சேமிப்பு தீருமுன்பு மீண்டுமங்கு போகவேண்டும் பல
 முத்தங்கள் வாங்கவேண்டும் ....


ஒரு கடலோடியின் வாழ்வு
                                                           - பத்மநாபபுரம் அரவிந்தன் -


திரண்டத் திட்டாய் கரு நீல மேகங்கள் 

உதிப்பின் ஒளியில் மேல் வானச்  சிவப்பு 

வெண் கை நீட்டி மற்றொரு  மேகம்... 

கடல்விட்டெம்பும் சீகல் பறவைகள் ...

அடர் நீல அசையும் பெரும் பட்டாய்க் கடல் ...

எத்தனை பேருக்குக் கிடைக்கும் இவ் வாய்ப்பு

கர்விக்கும் மனம்...  மறுநொடி சென்றமரும் 

மனைவிகுழந்தைகள் பக்கத்தில் ....

கண்கள் இங்கும் மனமங்குமாய்  

விடுமுறை தினத்தை கணக்கெடுக்கும்

நாளை மீண்டுமோர் விடியல்..  





18-09-2011 திண்ணை இணைய இதழலில்   வெளியான என் இரு கவிதைகள்...

Saturday, September 17, 2011

''இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி….'' - ஜெயமோகன் -

குமரிமாவட்டம் பொதுவாக மற்ற இடங்களை விட பசுமையானது. செடிகளின் வகைகள் ஏராளம். ஆகவே இங்கே ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் வர்ம மருத்துவமும் வெட்டு மருத்துவமும் போட்டிபோட்டு வளர்ந்ததை புரிந்துகொள்ள முடிகிறது. ஊருக்கு ஊர் பத்துப்பதினைந்து வைத்தியர்கள் இருப்பார்கள். எந்த சாயாக்கடையிலும் சாயா குடிக்கும் கும்பலில் ஒரு வைத்தியர் இருப்பார். டீக்கனார், மெம்பர்,புலவர் ஆகியோரும் கண்டிப்பாக உண்டு. சர்ச்சில் எந்த பொறுப்பு வகித்தாலும் டீக்கனார்தான். ஒரேயொருமுறை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டாலும் வாழ்நாள் முழுக்க மெம்பரே. வில்லுப்பாட்டு தொடர்ச்சியாக கேட்டாலே புலவர்.
வைத்தியர்கள் பொதுவாக வைத்தியத்தை எல்லா பேச்சிலும் கலப்பவர்கள்.’எம்ஜியாருக்கு கருணாநிதி சூடு!’ என்று தினத்தந்தி வாசித்து ‘இவனுகளுக்கு தலைக்கு நல்லா நெல்லிக்காதளம் வைக்கணும் கேட்டேரா?”. ‘குமரிக்கு ரயில்வே வராவிட்டால் போராட்டம் காமராஜ் ஆவேசம்’ — ”அப்பச்சிக்கு வேற சோலி இல்ல. நல்லா காரையிலைபோட்டு காலை உழிஞ்சிட்டு சாஞ்சு கெடக்குத பிராயம்லா? இப்ப செண்ணு சொன்னா கிராப்புக்காரி மயிரா மதிப்பா?”. ” கற்பழித்த ஆசாமி கம்பிநீட்டினார்”. ”கடுக்காய அரச்சு கலக்கி நல்லா நாலுநேரம் வீதம் குடிக்க வைச்சா பின்ன தெரியும்லே இவனுகளுக்க கம்பியும் கயறும்…”
ஆகவே எங்களூரில் எல்லாருக்குமே பச்சிலைகள் ‘முறிமருந்துகள்’ தெரிந்திருக்கும். நடைமுறையில் சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கு பச்சிலைகளை நாடுவோம். காயம்பட்டால் தொட்டால்வாடி இலை அல்லது முறிபொருந்தி இலை. உள்ளே அடிபட்டால் வேலிப்பருத்தி. புண்ணுக்கு சோற்றுக்கற்றாழை… பேச்சில் அவ்வப்போது பச்சிலைகள் தலைகாட்டினால் ஒரு இது இருக்கும் என்பது சிறுவர்களாகிய எங்களுக்கே தெரிந்திருந்தது.
எனக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டு அறிவுஜீவியாக ஆக ஆரம்பித்த நாட்களில் இந்த பச்சிலைப்பழக்கம் மட்டுப்பட்டது. ஒருமுறை அண்ணாவுடன் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றபோது இது சிக்கலாகியது. [எனக்கு நோய் விசாரிப்புக்குச் செல்வதெல்லாம் பெரிய மனச்சிக்கலை தருவன. மொழித்தடுமாற்றம் வேறு. காலில் அடிபட்ட அன்பையன் வைத்தியரை பார்த்துவிட்டு வரும்வழியில் தையல்கடை நாகப்பனிடம் 'அன்பையன் வைத்தியருக்கு துட்டி விசாரிச்சுட்டு வாறோம்' என்று சொல்லி அங்கேயே அண்ணாவால் அடிக்கப்பெற்றேன்] எங்களைக் கண்டதுமே பேத்தி நோயாளிக்கிழவியை தலையணை வைத்து தூக்கி அமரச்செய்தாள். கிழவி உற்சாகத்துடன் ”ஒண்ணும் சொல்லாண்டாம் எனக்க மோனே.. இனி இப்டி ஜீவிச்சிட்டு ஒரு காரியமும் இல்ல… போனாப்போரும்…” என்று ஆரம்பிக்க அண்ணா ”அதென்ன பேச்சு அம்மச்சியே… நாங்களெல்லாம் அம்மச்சிய அப்டி விட்டிருவோமா?” என்றார்.
‘சபாஷ்! சரியான பதில்!’ என்ற முகபாவனையுடன் பாட்டி திரும்பி ‘அப்ப நீ?’ என என்னைப்பார்த்தாள்.நான் அசட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தேன். அரைநிமிடம் பொறுத்தபின் பாட்டி எனக்கு ”என்ன சொல்லுகது? எல்லாம் கண்டாச்சு. வேண்டப்பட்டவிக எல்லாம் போயாச்சு…இனி இங்கிண ஆரு கெடக்கா?”என்று ஒரு பந்தை போட்டுத்தந்தாள். நான் அதை தவறவிட்டு அண்ணாவைப்பார்த்தேன். அவர் முகத்தில் பலவித சைகைகள். ஒன்றும் புரியவில்லை. கிழவி ‘ஆருலே இவன்?’ என்ற மாதிரி வாயை அழுத்தி அண்ணாவை அரைக்கணம் பார்த்துவிட்டு ”வெறுதே பூமிக்குப் பாரம்…அல்லாம என்ன?” என்று மிக எளிதான ஒன்றை எனக்குப் போட்டுத்தர நான் அண்ணாவை புரிந்துகொண்டு பதிலளித்தேன், ”பின்னே அல்லாம?”.
அண்ணா திரும்பும் வழியிலேயே என்னை அடிக்கமுற்பட்டார். நான் கண்ணிருடன் ”நான் இப்ப என்ன சொன்னேன்? நான் வரமாட்டேன்நு அப்பமே சொன்னேனே?”என்றேன். ”டேய் கூமுட்ட நாயே, ஒரு ஆளைப்பாக்கப்போனா நாம ஆறுதலா நாலு வார்த்தை சொல்லணும் இல்லடா?” ”எப்டி?” ”வெளங்கும்….. டே, ஆறுதலாட்டுடே, மயிரே. ‘இப்பம் கொள்ளாமா? செரியாப்போயிரும். மருந்து சாப்பிடுங்க’- எண்ணெல்லாம். நீ இனி நான் போற எடத்தில வந்து என்ன சொல்லுகேண்ணு பாரு… எந்த நேரத்திலே பெத்தாளோ உன்னையெல்லாம்…”
கவனித்த போது குழப்பம். ஒரு நோயாளி ”நல்லா சோறு எறங்கல்ல கேட்டேளா?” என்று சொல்லும்போது என்ன சொல்லவேண்டும்? அண்ணா ஒரு இடத்தில் ”சோறு என்ன சோறு? மனசு இருக்குல்லா?” என்றார். இன்னொரு இடத்தில் ”இனி ஒரு பத்துநாளு கழிஞ்சா கோழி திங்கலாமே…டீக்கனாரு சமாதானப்படணும்” என்றார். ”வாதத்துக்க உபத்திரவம் மக்கா” என்று கிழம் சொல்லும்போது ” வாற தைக்குள்ள சரியாப்போயிடும்” என்றேன் ஒருமுறை. அதெப்படிச் சொல்லலாம் என்று அண்ணா வீடுவரை திட்டினார். கிழவர்களுக்கு வரும் வாதம் சிதையில்தான் போகுமாம். அதனால்தான் நேசமணி ஆசான் நான் அப்படிச் சொன்னதும் முகம் வெளுத்தாரா? அடப்பாவமே.
கடைசியில் கண்டுகொண்டேன். எளியவழி கைமருத்துவம் சொல்வதுதான். ”ஒரு மாதிரி ஒரு வலிவு….சுவாசம் கிட்டல்ல”என்று கிழவி சொன்னால் அண்ணா அனுதாபத்துடன் ”…ஈருள்ளிய நல்லா நசுக்கி கொஞ்சம் சுக்கும் உப்பும் வச்சு கடிச்சு தின்னா ஒரு ஆசுவாசம் கிட்டுமே” என்பார். அவள் ”…எல்லாம் பாத்தாச்சு பிள்ளே” என்று திருப்தியுடன் சொல்வாள். நிஜமாகவே ஈருள்ளி மூச்சுத்திணறலுக்கு மருந்தா? ஆனால் அண்ணாவிடம் கேட்க முடியாது.
எங்களூர்க்காரர்கள் யதார்த்தவாதிகள். ”என்ன அம்மாச்சா? நல்லாருக்கியளா? என்ன, யாத்திரயா?” என்று வழியில் நலம் விசாரித்தால் ”நல்லா இருக்கேன் பிள்ள”என்று சொல்பவர்கள் அருமை. கண் பட்டுவிடுமென்ற அச்சமும் உண்டு. ”என்னத்த சொல்லுகது? இண்ணா கெடக்கோம், கஞ்சியும் பற்றும் குடிச்சிட்டு…சீவன் போகல்ல” என்பதே வழக்கம். ”ஏன், என்ன செய்யுது?” என்று கேட்காமல் போனால் மரியாதை இல்லை. ”என்னண்ணு சொல்லுகது? நாலஞ்சுநாளாட்டு ஒருமாதிரி ஏம்பக்கம் கேறிவருது…ங்கேவ்வ்வ்…” என்று அவர் சொல்லும்போது ‘வாளை சீசனில ஏப்பம் வரலேண்ணா குசுல்லா வரும்’ என்று எண்ணினாலும் ”குறே இஞ்சி எடுத்து உப்பு வச்சி சதைச்சு இத்திரி மிளகும் மஞ்சப்பொடியும் சேத்து சவைச்சரைச்சு விழுங்கப்பிடாதா? கேக்குமே? ”என்று கேட்பதே மரியாதை. அப்படிச்சொன்ன அன்பையன் வைத்தியரிடம் நான் ”கேக்குமா வைத்தியரே?” என்றேன். ”கேக்கும், சீவனை” என்றார்.
என் அறிதல்களை நான் தொகுத்துக் கொண்டேன். வயிறு தொடர்பான எந்த நோய்க்கும் இஞ்சி, உப்பு இரண்டையும் அடிப்படையாக வைத்து மண்ணில் முளைக்கும் எதையும் சேர்க்கலாம். சளிமூச்சுத்திணறலுக்கு சுக்கு, குருமிளகுடன் எதுவும். தலைவலி கழுத்துவலி வகையறாக்களுக்கு நெல்லிக்காய் அடிப்படை. கைவலிகால்வலிக்கு அப்படி விதிகள் இல்லை, அப்போது ஞாபகம் வருவது எதுவும்.
ஆரம்பத்தில் கிழங்கள் நோயைச் சொல்ல ஆரம்பித்ததுமே என் மூளை நான்குகால் பாய்ச்சலில் ஓடும். இது வயிறா நெஞ்சா தலையா? பல கிழங்களுக்கு அப்படி தெளிவும் இருப்பதில்லை ”…எல்லாம் தாழைமுக்கு சாத்தாதான் கேக்கணும் பிள்ளே, வயத்தில ஒரு உருளு கேறும்போ நெஞ்சில ஒருவேதன வரும் பாரு அப்பம் கேறி தலையில ஒரு பெருப்பு…என்ன சொல்லுகதுக்கு?” ஆனால் சீக்கிரமே தேறிவிட்டேன். ”அம்மச்சி ஒண்ணு கொண்டும் கவலைப்படப்பிடாது. இம்பிடு சுக்கெடுத்து நல்லா அரச்சு உப்புசேத்து…”
அதிலும் சிக்கல்கள் வந்தன. அண்ணா சில பாடங்கள் சொன்னார். அஞ்சறைப்பெட்டியில் இருக்கக் கூடிய பொருட்களாகவே சொல்லவேண்டும். ‘காராம்பசுவின் பாலில் சர்ப்பகந்தி இலையை போட்டு நன்றாகக் காய்ச்சி…’ என்றெல்லாம் சொல்லிவிடக்கூடாது. கைமருத்துவம் என்பது அடிக்கடி கையில் சிக்கும் பொருட்களினாலான மருத்துவம். அதேசமயம் சும்மா உப்பும் மிளகும் புளியும் சேர்த்து அரைத்து என்று துவையல் அரைக்கும் பக்குவத்தையெல்லாம் சொன்னால் அது மருந்தாகவும் காதுக்கு ஒலிக்காது. ஒரு மருந்து மட்டும் சற்றே வித்தியாசமாக இருக்கவேண்டும். கடுக்காய், தானிக்காய், குறுந்தோட்டி வேர், சோற்றுக்கற்றாழை, சீனமுட்டிக்கிழங்கு இப்படி…
ஆனாலும் எனக்கு ஒரு உதறல் இருந்தது. யாராவது சுடச்சுடப்போய் செய்து பார்த்துவிட்டால்? ”போடா மடையா, ஒரு கெளவியாவது நாட்டு மருந்து திண்ணு பாத்திருக்கியா? மரச்ச்£னி சீரணமாகல்லேண்ணாகூட பெரிய குப்பிய எடுத்திட்டு கம்பவுண்டர் கலக்கிக் குடுக்குற சாயத்தண்ணிக்கு போய் நிப்பாளுக. ‘லாக்கிட்டரே, ஊசி போடுங்க லாக்கிட்டரே’ண்ணு கெஞ்சுறாளுக…” அது உண்மை. குறிப்பாக ஊசி என்பது எங்களூரில் ஒரு சஞ்சீவி போல. மருமகள் திட்டினால் ‘ஒருமாதிரி ஒரு இது, லாக்கிட்டரே’ என்று சொல்லி கிழவிகள் போய் ஏசுவடியான் கம்பவுண்டரிடம் [அவர் போலி கம்பவுண்டர் என்பார்கள்] ஊசி போட்டுவருவார்கள்.
ஆகவே நான் துணிந்துவிட்டேன். யார் எது சொன்னாலும் அனுதாபத்துடன் கைமருத்துவம்– இருகைகளாலும். நாளடைவில் யோசிக்கவே வேண்டியதில்லை என்ற நிலை ஏற்பட்டது. சொல்லி விடைபெற்றபின் அந்த மருந்துக் கலவையை எண்ணி ‘பரவால்லியே..நிஜம்மாவே இது மருந்து போல வேலைசெய்யுமா என்ன?’ என்று சிந்தித்து நடப்பேன். மருந்து வேலைசெய்து அதற்கு நான் உரிமம் பெற்று கோடீஸ்வரனாக ஆவது பற்றிய பகல்கனவுகள் சுகமாக இருக்கும்.
சிலசமயம் என் வாயில் சரஸ்வதியே — அஸ்வினி தேவர்களோ?– வருவதுண்டு. ”இல்ல, இதாரு ஆசானோ? எங்க? காலத்தே கெளம்பியாச்சே” என்று நான் உற்சாகமாக நலம்விசாரிக்கையில் கைநடுங்க கண்மேல் பாலமிட்டு கூர்ந்து நோக்கி ”ஸாசம் கிட்டப்பளுதில்ல ஏமானே” என்று சொன்ன முண்டன் ஆசானிடம் ”அய்யோ…அப்டி விடப்பிடாதுல்லா? நல்லா மருந்து பாக்கணும்… சுக்கு இடிச்சு பிழிஞ்சு நாலு குருமிளகும் பொடிச்சு சேத்து ஒரு கரண்டி மண்ணெண்ணையும் விட்டு குடிச்சா ஒருமாதிரி இருக்கும்லா?”என்று சொல்லிவிட்டு நான் கடந்து சென்றபோது இந்த மண்ணெண்ணையை ஏன் சேர்த்தேன் என்று ஆழமாக சிந்தித்தேன். மூச்சுக்கு எளிதில் ஆவியாகும் பொருள் தேவை எனறா?
கிடைத்துவிட்டது. புல்லெண்ணையை தண்ணீரில் விட்டு அதில் குருமிளகு போட்டு ஆவிபிடிக்கும் பழக்கம் என் பாட்டிக்கு உண்டு. புல் எண்ணை எப்படியோ நாக்கில் மண்ணெண்ணை ஆகிவிட்டது. ஆனால் அதுவும் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. வேறு ஆளிடம் சொல்லலாமோ? ஆனால் இனி இப்படி பூரண தன்மய பாவத்துடன் சொல்ல முடியுமா? வேகமாகச் சொன்னால் எல்லாம் சரியாகப்போய்விடும். நாட்டுமருந்து சொல்லும்போது நடுவே கமா போடக்கூடாது. கிளம்பினால் முடித்துவிடவேண்டுமென்பது ஒரு பாடம்
எட்டுநாள் கழிந்து முண்டனாசானின் பேத்தி செல்லம்மை என் அம்மாவிடம் சொன்னதைக் கேட்டு சற்றே அதிர்ந்துபோனேன். ”இப்பம் மண்ணெண்ணை விட்டாக்கும் குடிச்சியது. நாலஞ்சுநாளாட்டு நல்ல தெளிச்சி உண்டு கேட்டியளா அம்மிணி? பின்ன, நிதம் ஒரு கோரு மண்எண்ணை வேணும். சவம் போட்டு, இனி எம்பிடுநாள் கெடக்கும்ணு நானும் ஒண்ணும் சொல்லுகதில்ல”
ஒவ்வொருநாளும் ஆசானின் மரணச்செய்திக்காக காத்திருந்தேன். அவரது பதினாறடியந்திரத்தில் எனக்கு சோறு விக்குவதைப்பற்றி கற்பனைசெய்தேன். ஆசானுக்கு அந்த வைத்தியத்தை சொன்னது நான்தான் என்று ஞாபகமிருக்க நியாயமில்லை. எதிரே வருபவர் கோமணம் அணிந்திருந்தால் மட்டுமே தான் கோமணம் அணிந்திருக்கிறோமா என்று குனிந்து பார்ப்பவர் அவர். ஆனால் அணையப்போகும் திரி ஆளி எரிந்தால் என்ன செய்ய முடியும்?
மதில்மேல் தேங்காயாக ஒவ்வொருநாளும் வாழ்ந்திருந்த ஆசான் நான் ஊரைவிட்டு வரும்வரையில் கிண் கிண் என்று இருந்தார் என்று சொன்னால் நம்பவேண்டும். ஆறுமாதம் கழிந்தபோது என் அச்சம் விலகியது. உண்மையிலேயே மண்எண்ணைக்கு ஏதோ மருத்துவகுணம் இருக்கிறது என இப்போது உறுதியாக நம்புகிறேன். சும்மாவா அதை கிருஷ்ணாயில் என்றார்கள். கிருஷ்ண கிருபையால் மேலும் ஏழுவருடம் வாழ்ந்து எண்பத்தெட்டு வயதில் ஆசான் சாகும்போது பேரன்பேத்திகள் கூடி ”வாறப்பல்லாம் மண்ணெண்ணை வேணும்ணு கேப்பியே அப்பூ.. இப்ப மண்ணெண்ணையோட வந்திருக்கேன் எனக்க அப்பூ…போயிட்டியே..”என்றுதான் கதறியிருப்பார்கள்.
இந்த அதிநவீன மருத்துவ யுகத்திலும் கைமருத்துவம் சொல்லும் வழக்கம் நம்மிடையே பரவலாக இருக்கிறது. இன்றுகாலையில்கூட ஒருவர் நான் காலையில் சாப்பிடவில்லை என்பதை நோய் என எடுத்துக் கொண்டு ”மோரில காயத்த விட்டு கலக்கி கொஞ்சம் உப்பும் போட்டு…” என்று விரிவாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.நம் உடல்நலத்தில் உலகுக்கு அக்கறை இருக்கிறது.மேலும் மண்ணெண்ணை போல சில கண்டுபிடிப்புகளுக்கு அதில் வாய்ப்பும் இருக்கிறது. உதாரணமாக இதை உங்களால் வேகமாக படிகக் முடியவில்லை என்றால் கொஞ்சம் வேப்பம்பூ எடுத்து லேசாக வறுத்து உப்பு சேர்த்து….

Sunday, September 11, 2011

சூரத் காபி கடை - லியோ டால்ஸ்டாய்

சூரத் காபி கடை - லியோ டால்ஸ்டாய் 

              

ந்தியாவில் உள்ள சூரத் என்ற நகரத்தில் ஒரு காபி கடை இருந்தது. அங்கு நிறைய உலகத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த வழிப்போக்கர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் சந்தித்து உரையாடிக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் ஒரு படித்த பாரசீக ஆன்மிக வாதி அந்த காபி கடைக்கு வந்திருந்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையை- கடவுளின் இயல்பைப் பற்றித் தெரிந்துகொள்வதிலும், அதைப் பற்றிப் படிப்பதிலும் எழுதுவதிலும் கழித்தவர். அவர் கடவுளைப் பற்றி ஏராளமாக சிந்தித்தார், படித்தார், எழுதினார். அதனால் காலப்போக்கில் அவர்  தன்னுடைய நகைச்சுவை உணர்வை இழந்து, மிகுந்த குழப்பவாதியாக மாறி, கடவுளின் தோற்ற இருத்தலில் நம்பிக்கை வைத்திருப்பதைக்கூட நிறுத்திக்  கொண்டார். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட ஷா, பாரசீகத்திற்குள்         அவர் இருப்பதற்கு தடை விதித்தார்.

"முதல் காரணம்' என்பதைப் பற்றி தன் வாழ்நாள் முழுவதும் விவாதம் செய்த அந்த அதிர்ஷ்டமில்லாத ஆன்மிகவாதி தனக்குத் தானே குழம்பிப் போயிருந்தார். தன்னுடைய அறிவையே இழந்து விட்டோம் என்பதைக்கூட புரிந்துகொள்ளாமல் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு அப்படியொரு உயர்ந்த அறிவு என்பது இல்லவே இல்லை என்று அவர் சிந்திக்க ஆரம்பித்தார்.

அவருக்கு ஒரு ஆஃப்ரிக்க அடிமை இருந்தான். அவன் எல்லா இடங்களுக்கும் அவரைப் பின்பற்றி வருவான். அந்த ஆன்மிகவாதி காபி கடைக்குள் நுழைந்தபோது, அந்த அடிமை வெளியிலேயே இருந்துவிட்டான். அவன் கதவுக்கு அருகில், சூரிய வெளிச்சத்தில் ஒரு கல்லின்மீது உட்கார்ந்துகொண்டு தன்னைச் சுற்றிக் கொண்டிருந்த ஈக்களை விரட்டிக்கொண்டிருந்தான். காபி கடைக்குள் இருந்த ஒரு ஸோஃபாவில் உட்கார்ந்த பாரசீக ஆன்மிகவாதி தனக்கு ஒரு கோப்பை "ஓப்பியம்' வேண்டுமென்று கேட்டார். அவர் அதைக் குடித்து முடித்தவுடன், "ஓப்பியம்' அவருடைய முளையின் வேலைகளைத் துரிதப்படுத்தியது. அப்போது அவர் திறந்திருந்த கதவு வழியாக தன்னுடைய அடிமையிடம் கேட்டார்:

""சொல்லு... நாசமாப் போன அடிமையே, கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? நீ என்ன நினைக்கிறாய்?''

""அனேகமாக... இருக்கிறார்...'' அடிமை கூறினான். உடனடியாக அவன் தன்னுடைய இடுப்பிற்குள்ளிருந்து மரத்தாலான ஒரு சிறிய சிலையை  எடுத்தான்.

""இவர்தான்...'' அவன் சொன்னான்: ""இந்தக் கடவுள்தான் தான் பிறந்த நாளிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர். எங்கள் நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு மரத்தை வழிபடுவோம். அந்த மரத்திலிருந்து உருவாக்கப்பட்டவர்தான் இந்தக் கடவுள்.''

ஆன்மிகவாதிக்கும் அவருடைய அடிமைக்குமிடையே நடை பெற்ற இந்த உரையாடலை அந்த காபி கடையில் உட்கார்ந்திருந்த மற்ற விருந்தாளிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆன்மிகவாதியின் கேள்விகளைக் கேட்டு வியப்படைந்தார்கள். அதைவிட அதிகமான வியப்பு அந்த அடிமையின் பதிலைப் பார்த்து அவர்களுக்கு உண்டானது.

அவர்களில் ஒருவர் பிராமணர். அந்த அடிமையின் வார்த்தைகளைக் கேட்ட அவர், அவன் பக்கம் திரும்பிக் கூறினார்:

""பரிதாபத்திற்குரிய முட்டாள்! ஒரு மனிதனின் இடுப்புக்குள் கடவுளை வைத்துக் கொண்டு திரிய முடியும் என்று நீ நம்புகிறாயா? அது சாத்தியமா? ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். அவர்- பிரம்மா. அவர் முழு உலகத்தையும்விட மிகவும் பெரியவர். ஏனென் றால் அவர்தான் அதைப் படைத்தவரே. பிரம்மா மட்டுமே ஒரே கடவுள். அவர்தான் பலம் கொண்ட கடவுள். அவர்மீது கொண்ட பக்தியால் உருவாக்கப்பட்ட கோவில்கள் கங்கை நதியின் கரைகளில் இருக்கின்றன. அங்கு அவரின் உண்மையான துறவிகளான பிராமணர்கள் அவர்களை வழிபடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான கடவுளைத் தெரியும். அதே நேரத்தில், அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்தோடிவிட்டன. ஒரு புரட்சிக்குப் பிறகு இன்னொரு புரட்சி என்று பல நடந்தும், துறவிகள் தங்களுடைய நிலையைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம்- பிரம்மா என்ற உண்மையான கடவுள் அவர்களைக் காப்பாற்றி வந்திருக்கிறார்.''

அங்கு அமர்ந்திருந்த ஒவ்வொருவரையும் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் அந்த பிராமணர் பேசினார். ஆனால், அங்கிருந்த ஒரு யூத தரகர் அவருக்கு பதில் கூறினார். அவர் சொன்னார்:


""இல்லை... உண்மையான கடவுளின் ஆலயம் இந்தியாவில் இல்லை. கடவுள் பிராமண ஜாதியைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்ற வும் இல்லை. உண்மையான கடவுள் என்பவர் பிராமணர்களின் கடவுளும் அல்ல. உண்மையில் கடவுள் என்பவர் ஆப்ரஹாம், ஐசக், ஜேக்கப் ஆகியோரின் கடவுள்தான். அவர் யாரையும் காப்பாற்ற வில்லை. அவர் தேர்ந்தெடுத்த ஆட்கள்தான் காப்பாற்றுகிறார்கள். அதாவது- இஸ்ரேலியர்கள். உலகம் ஆரம்பமானதிலிருந்து நம் நாடு அவர்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறது. அவர் நமக்கு மட்டுமே சொந்தமானவர். இப்போது நாம் உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கிறோம் என்றால், இது அவர் நம்மீது நடத்தும் சோதனையே. ஒருநாள் தன்னுடைய மக்கள் எல்லாரையும் ஒன்று திரட்டிக் கொண்டு வந்து ஜெருசலேமில் சேர்ப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். பண்டைய உலகின் ஆச்சரியச் சின்னமான ஜெருசலேமில் இருக்கும் ஆலயத்தின் அழகிய தன்மையுடன், எல்லா நாடுகளையும் ஆட்சி செய்யக்கூடிய அதிகாரம் கொண்டதாக இஸ்ரேல் இருக்கும்.''

இப்படிக் கூறிய அந்த யூதர் கண்ணீர்விட்டு அழுதார். அவர் மேலும் சில விஷயங்களைக் கூற நினைத்தார். ஆனால், அங்கு இருந்த ஒரு இத்தாலிய மத ஊழியர் அவரைத் தடுத்து நிறுத்திவிட்டார்.

""நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அது பொய்.'' அவர் அந்த யூதரைப் பார்த்துக் கூறினார்: ""நீங்கள் கடவுளுக்கு தீங்கு இழைக் கிறீர்கள். மற்ற நாடுகளைவிட உயர்வாக உங்கள் நாட்டை கடவுள் நேசிக்க முடியாது. அது அப்படியே உண்மையாக இருந்தாலும், அதாவது- முன்பு கூறுவதைப்போல அவர் இஸ்ரேலியர்களின் பக்கம்தான் இருக்கிறார் என்றாலும், அவரை அவர்கள் கோபப்பட வைத்து இப்போது ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்கள் கடந்தோடிவிட்டன. தங்களுடைய நாட்டை அழிப்பதற்கு அவரைக் காரணமாக்கி, உலகம் முழுக்க தாங்கள் சிதறிக் கிடக்கும்படி செய்துவிட்டார்கள். அதே நேரத்தில் அவர்களின் நம்பிக்கைகளில் மாற்றங்கள் எதுவும் உண்டாகி விடவில்லை. அவை செத்துப் போய்விட்டன. எங்கோ இங்குமங்குமாக இருக்கின்றன. அவ்வளவு தான். எந்தவொரு தனிப்பட்ட நாட்டிக்கும் கடவுள் முன்னுரிமை அளிப்பதில்லை. அதே நேரத்தில் ரோமில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்திற்குக் கீழே பாதுகாப்பு தேடும் அனைவரையும் அவர் அழைக்கிறார். அந்த தேவாலயத்தின் எல்லைகளைத் தாண்டி ஆறுதல் என்பது எங்கும் கிடைக்கவே கிடைக்காது.''

அந்த இத்தாலியர் இவ்வாறு கூறினார். ஆனால், அங்கு அமர்ந்திருந்த ஒரு ப்ராட்டஸ்டண்ட் பேராசிரியரின் முகம் வெளிறிப் போய்விட்டது.  அவர் கத்தோலிக்க ஊழியரின் பக்கம் திரும்பி கிண்டலாகக் கேட்டார்.

""ஆறுதல் என்பது உங்களின் மதத்தில்தான் இருக்கிறது என்று நீங்கள் எப்படிக் கூறலாம்? வேத நூலில் கிறிஸ்து கூறியபடி மனதாலும் உண்மையாலும் யார் கடவுளுக்கு சேவை செய்கிறார் களோ, அவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள்.''


தொடர்ந்து காபி கடையில் அமர்ந்து குழாய் மூலம் புகைத்துக் கொண்டிருந்த சூரத்தில் இருக்கும் சுங்க அலுவலகத்தில் பணியாற் றிக் கொண்டிருக்கும் துருக்கியைச் சேர்ந்த ஒரு அதிகாரி உயர்வு மனப்பான்மையுடன் அந்த இரண்டு கிறிஸ்துவர்களின் பக்கமும் திரும்பினார்.

""உங்களின் உரோம மதத்தின்மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீண்.'' அவர் சொன்னார்:
""உண்மையான நம்பிக்கையால் ஆயிரத்து இருநுறு வருடங்களுக்கு முன்பே அதையெல்லாம் தாண்டி வந்தாகிவிட்டது. அதாவது முஹம்மதுமீது கொண்ட நம்பிக்கையால்! உங்களால் முடியாது- அதே நேரத்தில் முஹம்மது மீது கொண்ட அந்த உண்மையான நம்பிக்கை ஐரோப்பாவிலும் ஆசியாவிலும்- இன்னும் சொல்லப்போனால் மாறிவிட்டிருக்கும் சீனாவிலும்கூட- எப்படி வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். கடவுள் யூதர்களை வெறுத்து ஒதுக்கிவிட்டார் என்று உங்களுக்கு நீங்களே கூறிக் கொண்டீர்கள். அதற்கு ஆதாரமாக- யூதர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள் என்றும் அவர்களுடைய நம்பிக்கை பரவவில்லை என்றும் இருக்கக் கூடிய உண்மையைக் கூறினீர்கள். அப்படியென்றால், முஹம்ம தனிஸம் என்ற உண்மைதான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதையும், அது தூர இடங்களிலும்கூட பரவிக் கொண்டிருக்கிறது என்பதை யும் ஒத்துக்கொள்ளுங்கள். கடவுளின் சமீபத்திய தூதரான முஹம்மதுவைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே காப்பாற்றப் படுவார்கள். அவர்களைத் தவிர, வேறு யாருமே காப்பாற்றப்பட மாட்டார்கள். அவர்களில் அலியைப் பின்பற்றுபவர்கள் அல்ல- உமரைப் பின்பற்றுபவர்கள்தான் காப்பாற்றப்படுவார்கள். அலியைப் பின்பற்றுபவர்கள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள்.''


அதற்கு அலியின் பிரிவைச் சேர்ந்த பாரசீக ஆன்மிகவாதி பதில் கூற விரும்பினார். அதற்குள் அங்கிருந்த பல்வேறு நம்பிக்கை களையும் கொள்கைகளையும் கொண்ட வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த மனிதர்களுக்கிடையே ஒரு மிகப்பெரிய சண்டை உண்டாகி விட்டிருந்தது. அபிஸினியன் கிறிஸ்துவர்கள், திபெத்திலிருந்து வந்திருந்த லாமாக்கள், இஸ்மாயிலைப் பின்பற்றுபவர்கள், நெருப்பை வழிபடுபவர்கள் என்று பலரும் அங்கு இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் கடவுளின் இயல்பைப் பற்றியும் அவரை எப்படி வழிபடுவது என்பதைப் பற்றியும் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய நாட்டில் மட்டும்தான் உண்மையான கடவுள் இருக்கிறார் என்றும், அங்கு மட்டுமே ஒழுங்கான முறையில் அவர் வழிபடப்படுகிறார் என்றும் கூறினார்கள்.

சீனாவைச் சேர்ந்த ஒரு கன்ஃபூஸியஸ் மாணவனைத் தவிர, அங்கிருந்த ஒவ்வொருவரும் விவாதம் செய்வதும் உரத்த குரலில் சத்தம் போடுவதுமாக இருந்தார்கள். அந்த மாணவன் மட்டும் அந்த காபி கடையில் ஒரு மூலையில் அந்த சண்டையில் பங்கே பெறாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அங்கு உட்கார்ந்து தேநீரைப் பருகிக் கொண்டே அவன் அங்கிருந்த மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் எதுவும் பேசவில்லை.
அங்கு அமர்ந்திருந்த அவனை கவனித்த துருக்கி நாட்டைச் சேர்ந்த மனிதர் அவனிடம் கூறினார்.

""நான் கூறியதைப் பற்றிய உன் முடிவைச் சொல், என் இனிய சீன நாட்டைச் சேர்ந்த நண்பரே! நீங்கள் அமைதியாக இருங்க. அதே நேரத்தில் நீங்கள் வாய் திறந்து பேசினால், என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்வேன். உதவி தேடி என்னைத் தேடி வரும் உங்கள் நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் என்னிடம் கூறுவார்கள்- சீனாவில் பல மதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், சீனாக்காரர்களான நீங்கள் முஹம்மதனிஸம்தான் மற்ற எல்லா மதங்களையும்விட சிறந்தது என்று ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றும், அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்றும். என் வார்த்தைகள் உண்மையா என்பதைப் பற்றிய உங்களின் முடிவைக் கூறுங்கள். உண்மையான கடவுளைப் பற்றியும், அவருடைய தூதர்களைப் பற்றியும் உள்ள உங்களின் கருத்தை எங்களிடம் கூறுங்கள்.''

""உண்மைதான்...'' மற்றவர்கள் சீனாவைச் சேர்ந்த மாணவன் பக்கம் திரும்பினார்கள்: ""இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொள்கிறோம்.''


கன்ஃபூஸியஸ் மாணவனான அந்த சீனாவைச் சேர்ந்தவன் தன் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் சிந்தித்தான். தொடர்ந்து அவன் கண்களை மீண்டும் திறந்து, தன் கைகளை தான் அணிந்திருந்த ஆடையின் அகலமான கழுத்துப் பகுதிகளில் இருந்து எடுத்து, நெஞ்சின் மீது மடித்து வைத்துக்கொண்டு, கீழ்க்கண்ட வாறு மிகவும் அமைதியான, தாழ்ந்த குரலில் பேசினான்.

""அய்யாமார்களே, மனிதர்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதைத் தடுப்பதே முக்கியமாக ஆணவம்தான். நீங்கள் நான் சொல்வதைக் கேட்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், நான் உங்களுக்கு ஒரு கதையைக் கூறுகிறேன். இந்தக் கதை ஒரு உதாரணத்துடன் உங்களுக்கு விளக்கிக் கூறும்.

நான் உலகத்தையே சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஆங்கிலேயர் களின் நீராவிப் படகில் சீனாவிலிருந்து வந்தேன். நாங்கள் நல்ல நீருக்காக படகை, சுமத்ரா தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் நிறுத்தினோம் அது மதிய நேரம். எங்களில் சிலர் கடற்கரையில் இருந்த தென்னை மரங்களுக்கு அடியில் உட்கார்ந்திருந்தார்கள். அது ஒரு சிறிய கிராமத்திற்கு மிகவும் அருகில் இருந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதர்களும் அங்கு இருந்தோம்.
நாங்கள் அப்படி உட்கார்ந்திருந்தபோது, கண் பார்வை தெரியாத ஒருவன் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். சூரியனையே மிகவும் நீண்ட நேரமாகவும் கூர்ந்து கூர்ந்தும் பார்த்துக் கொண்டிருந்த காரணத்தால் அவனுக்கு காணும் சக்தி இல்லாமல் போய்விட்டிருக்கிறது என்பதை பின்னர் நாங்கள் தெரிந்து கொண்டோம். சூரியனிடமிருந்து வெளிச்சம் வருகிறதே... அந்த வெளிச்சத்தைத் தரும் சூரியன் என்றால் என்ன என்பதை அவன் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறான்.

இந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு அவன் நீண்ட நேரத்தைச் செலவிட்டிருக்கிறான். சூரியனையே தொடர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது...

ஆனால், இறுதியாக விளைந்தது- சூரியனின் வெளிச்சம் பட்டுப்பட்டு அவனுடைய கண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டன. அவன் குருடனாகி விட்டான்.

தொடர்ந்து அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: "சூரியனின் வெளிச்சம் ஒரு திரவப் பொருள் அல்ல. அது திரவப் பொருளாக இருந்தால், அதை ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்குள் ஊற்ற முடியும். அது அசையக் கூடிய பொருளாக இருக்கும்- நீரைப்போல, காற்றைப்போல. அது நெருப்பாகவும் இருக்க முடியாது. நெருப்பாக இருந்தால், அதை நீர் அணைத்து விடும். ஆவியை ஒளி ஏற்றக் கூடிய வெளிச்சமும் இல்லை. அதைத் தான் கண்களால் பார்க்க முடிகிறதே? அது திடப் பொருளும் இல்லை. அது நகர்த்தக் கூடியதாக இல்லையே! அதனால் சூரியனின் வெளிச்சம் திரவம் அல்ல, நெருப்பு அல்ல, ஆவியும் அல்ல, திடப் பொருளும் அல்ல... அது- எதுவுமே அல்ல.''

அவன் தனக்குள் விவாதம் செய்தான். எப்போதும் சூரியனையே பார்த்துக் கொண்டிருந்தாலும், அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாலும், இறுதியாக அவன் தன்னுடைய இரண்டு கண்களிலும் பார்க்கும் சக்தியையும் சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து விட்டான். அவன் முழுமையாக கண் பார்வை தெரியாத மனிதனாக ஆனவுடன், சூரியன் தோன்றுவதே இல்லை என்ற முழுமையான முடிவிற்கு அவன் வந்துவிட்டான்.
அந்த கண் பார்வை தெரியாத மனிதனுடன், அடிமை ஒருவன் வந்தான். அவன் தன்னுடைய எஜமானனை தென்னை மரத்தின் நிழலில் உட்காரச் செய்துவிட்டு, தரையிலிருந்த ஒரு தேங்காயை எடுத்து, அதை ஒரு இரவு நேர விளக்காக ஆக்குவதில் ஈடுபட்டான். தேங்காய் நாரிலிருந்து திரியைத் திரித்து, தேங்காயிலிருந்து எண்ணெய்யைப் பிழிந்து சிரட்டையில் ஊற்றி, திரியை அதில் முக்கினான்.

அந்த அடிமை உட்கார்ந்து இதைச் செய்து கொண்டிருந்த போது, கண் பார்வையை இழந்த மனிதன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டே அவனிடம் சொன்னான்.

""அடிமையே! சூரியன் ஒன்ற என்று இல்லவே இல்லை என்று நான் உன்னிடம் கூறினேனே, அதுதானே உண்மை? இப்போது எவ்வளவு இருட்டாக இருக்கிறது என்பதை நீயே பார்க்கிறாய் அல்லவா? எனினும், மக்கள் கூறுகிறார்கள்- சூரியன் என்ற ஒன்று இருக்கிறது என்று. அப்படியென்றால், அது என்ன?''

""சூரியன் என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது.'' அந்த அடிமை. கூறினான்: ""அது என்னுடைய வேலையும் இல்லை. ஆனால், வெளிச்சம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். இங்கு உங்களுக்காக ஒரு இரவு விளக்கை தயார் பண்ணி இருக்கிறேன். இதன் உதவியைக் கொண்டு உங்களுக்கு நான் சேவை செய்ய முடியும். இந்தக் குடிலில் எது இருந்தாலும், என்னால் இதைக் கொண்டு கண்டு பிடித்துவிட முடியும்.''

தொடர்ந்து அந்த அடிமை தேங்காயை எடுத்து, சொன்னான்:


""இதுதான் என்னுடைய சூரியன்.''


அங்கு... அருகில் நடக்க உதவும் கருவிகளுடன் அமர்ந்திருந்த ஒரு முடமான மனிதன் இந்த வார்த்தைகளைக் கேட்டு சிரித்தான்.


""நீ உன்னுடைய வாழ்க்கை முழுவதும் வெளிப்படையாக ஒரு குருடனாக ஆகிவிட்டாய்.'' அவன் கண் பார்வையற்ற மனிதனைப் பார்த்துக் கூறினான்: ""சூரியன் என்றால் என்ன என்பது தெரிய வில்லையென்றால், அது என்ன என்று நான் உனக்கு காட்டுகிறேன். சூரியன் என்பது ஒரு நெருப்புப் பந்து. அது தினந்தோறும் காலையில் கடலுக்குள்ளிருந்து உதயமாகி ஒவ்வொரு மாலை நேரத்திலும் நமது தீவில் இருக்கும் மலைகளுக்குக் கீழே மறைந்து போகிறது. நாங்கள் எல்லாருமே அதைப் பார்த்திருக்கிறோம். உனக்கு பார்க்கும் சக்தி இருந்திருந்தால், நீயும் அதைப் பார்த்திருப்பாய்.''

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மீனவன் சொன்னான்.


""நீ உன்னுடைய தீவைத் தாண்டி வேறு எங்குமே சென்றதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. உனக்கு கால் ஊனமாகிப் போகாமல் இருந்து, நான் ஒரு மீன் பிடிக்கும் படகில் இருப்பதைப் போல நீயும் வெளியே பயணிப்பதாக இருந்தால், உனக்குத் தெரிய வந்திருக்கும்- சூரியன் நம்முடைய தீவில் இருக்கும் மலைகளுக்குப் பின்னால் மறையவில்லை என்று. ஆனால், அது தினமும் காலையில் கடலுக்குள் இருந்து உதயமாகிறது. அதேபோல மீண்டும் ஒரு மாலை நேரத்தில் ஒவ்வொரு இரவிலும் கடலுக்குள் போய் மறைந்துவிடுகிறது. நான் உனக்கு என்ன கூறுகிறேனோ, அது உண்மை. ஏனென்றால், நான் அதை ஒவ்வொரு நாள் காலையிலும் என்னுடைய சொந்தக் கண்களால் பார்க்கிறேன்.''


அப்போது எங்களுடைய குழுவில் இருந்த ஒரு இந்தியர் அவன் பேசிக் கொண்டிருப்பதற்கு இடையில் புகுந்து கூறினார்:

""ஒரு சிந்திக்கக் கூடிய மனிதர் இப்படி முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே என்பதை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு நெருப்புப் பந்து எப்படி நீருக்குள் அணையாமல் போக முடியும்? சூரியன் என்பது ஒரு நெருப்புப் பந்தே அல்ல. ஒரு ஒரு கடவுள். பெயர் தேவா. அவர் எப்போதும் ஒரு சாரட்டு வண்டியில் "மேரு' என்றழைக்கப்படும் பொன்னாலான மலையையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் விஷப் பாம்புகளான ராகுவும்- கேதுவும் தேவாவைத் தாக்கி அவரைச் சாப்பிட்டுவிடும். அந்தச் சமயத்தில் பூமி இருட்டாகிவிடும். கடவுள் திரும்பவும்  வரவேண்டும் என்பதற்காக எங்களுடைய  துறவிகள் வேண்டிக் கொள்வார்கள். அப்போது கடவுள் திரும்பவும் வந்துவிடுவார். உங்களைப்போன்ற எதுவுமே தெரியாத மனிதர்கள்- தங்களுடைய சொந்தத் தீவைத் தாண்டி வேறு எங்குமே செல்லாத வர்கள்தான் சூரியன் தங்களுடைய நாட்டில் மட்டுமே உதித்துக் கொண்டிருக்கிறது என்று கற்பனை பண்ணிக் கொண்டிருக் கிறார்கள்.''

அப்போது எங்களுடன் அங்கு அமர்ந்திருந்த எகிப்து நாட்டுக் கப்பலின் தலைவர் தன்னுடைய பங்கிற்கு கூறினார்:

""இல்லை...'' அவர் சொன்னார்: ""நீங்களும் தவறாகக் கூறுகிறீர்கள். சூரியன் என்பது கடவுளே அல்ல. அது இந்தியாவையும் அதன் பொன்னாலான மலையை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கவில்லை. நான் கருடங்கடல் வழியாக எவ்வளவோ பயணித்திருக்கிறேன். அரேபியாவின் கடற்பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன்... மடகாஸ்கருக்குச் சென்றிருக்கிறேன். பிலிப்பைன்ஸுக்குப் போயிருக்கிறேன். சூரியன் இந்தியாவிற்கு மட்டுமல்ல- முழு பூமிக்கும் வெளிச்சத்தைத் தருகிறது. அது ஒரே ஒரு மலையை மட்டும் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. தூரத்துக் கிழக்கில் அது ஜப்பானின் தீவுகளைத் தாண்டி உதயமாகி தூரத்து... தூரத்து... மேற்கில் இங்கிலாந்தின் தீவுகளையும் தாண்டி மறைகிறது. அதனால்தான் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய நாட்டை "நிப்பான்' என்கிறார்கள். அதற்கு அர்த்தம் "சூரியன் பிறக்கும் இடம்' என்பது. எனக்கு இந்த விஷயங்கள் நன்றாகத் தெரியும். ஏனென்றால் நானே எவ்வளவோ விஷயங்களை நேரில் பார்த்திருக்கிறேன். என்னுடைய தாத்தாவிடமிருந்து எவ்வளவோ விஷயங்களைக் கேட்கவும் செய்திருக்கிறேன். அவர் கடலின் இறுதிப் பகுதிக்கே போய் வந்தவர்.''

அதற்கு மேலும் அவர் ஏதாவது பேசிக் கொண்டிருந்திருப்பார். ஆனால், எங்களுடைய கப்பலில் இருந்த ஒரு ஆங்கிலேய மாலுமி இடையில் புகுந்து கூறினார்:

""வேறு எந்த நாடுமே இல்லை.'' அவர் சொன்னார்: ""சூரியனின் நகர்வுகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது- இங்கிலாந்தைத் தவிர. இங்கிலாந்தில் இருக்கும் எல்லாருக்கும் தெரிந்திருப்பதைப்போல சூரியன் எங்கும் உதயமாவதில்லை. எந்த இடத்திலும் மறைவது மில்லை. அது எப்போதும் பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த விஷயத்தை நாம் உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். காரணம்- நாமே உலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். நாம் எந்த இடத்திலும் சூரியனுடன் மோதவில்லை. இங்கு எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ, அதேபோல நாம் எங்கு சென்றாலும், சூரியன் காலையில் தன்னுடைய முகத்தைக் காட்டுகிறது. இரவில் தன்னைத் தானே மறைத்துக் கொள்கிறது.''

ஆங்கிலேய மனிதர் ஒரு குச்சியை எடுத்து தரையில் வட்டங் களை வரைந்தார். அதன் மூலம் சூரியன் எப்படி பிரபஞ்சத்தில் நகர்கிறது என்பதையும் உலகத்தை எப்படி சுற்றி வருகிறது என்பதையும் விளக்க முயற்சித்தார். ஆனால், அவரால் அதை தெளிவாக விளக்கிக் கூற முடியவில்லை. கப்பலின் பைலட்டைச் சுட்டிக் காட்டியவாறு அவர் சொன்னார்.

""எனக்குத் தெரிந்ததைவிட அதைப் பற்றி இவருக்கு நன்றாகத் தெரியும். இவரால் அந்த விஷயத்தை தெளிவாக விளக்கிக் கூற முடியும்.''

அறிவாளியான பைலட் தன்னைப் பேசுவதற்கு அழைக்கும் வரை பேச்சுக்கள் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந் தார். இப்போது எல்லாரும் அவரையே பார்த்தார்கள். அவர் சொன்னார்:

""நீங்கள் ஒருவருக்கொருவர் தவறான விஷயங்களைக் கூறி உங்களுக்குள்ளேயே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். சூரியன் பூமியைச் சுற்றிச் செல்லவில்லை. ஆனால், பூமிதான் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. போகும்போதே சுற்றிக்கொண்டே செல்லும் அது ஒவ்வொரு இருபத்து நான்கு மணி நேரம் ஆனதும், சூரியனை நோக்கித் திரும்புகிறது. ஜப்பான், பிலிப்பைன்ஸ், இப்போது நாம் இருக்கும் சுமத்ராவில் மட்டுமல்ல- ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, இன்னும் இருக்கும் எல்லா நிலப் பகுதிகளி லும்... சூரியன் ஒரு குறிப்பட்ட மலைக்காக மட்டும் ஒளி தருவதில்லை. அதேபோல ஒரு குறிப்பிட்ட தீவுக்காகவும் அல்ல... ஒரு கடலுக் காகவும் அல்ல... ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்காக மட்டும் அல்ல.... மற்ற எல்லா கோள்களுக்காகவும்போல நம்முடைய பூமிக்காகவும். நீங்கள் உங்களின் சொந்தக் காலடிகள் பதிந்திருக்கும் பூமியைப் பார்ப்பதற்கு பதிலாக மேலே இருக்கும் பிரபஞ்சத்தைப் பாருங்கள். அப்போது இது உங்களுக்குப் புரியும். அதற்குப் பிறகு சூரியன் உங்களுக்காக உதிக்கிறது என்றோ உங்களின் நாட்டிற்காக மட்டுமே உதயமாகிறது என்றோ இன்னொரு முறை கூறவே மாட்டீர்கள்.''

இவ்வாறு பேசிய உலகத்தின் பெரும் பகுதியைச் சுற்றி வந்திருக்கும் அந்த அறிவாளியான பைலட் மேலே இருக்கும் பிரபஞ்சத்தையே நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

""இதுதான் நம்பிக்கை பற்றிய கதைகள்.'' அந்த சீனாவைச் சேர்ந்த, கன்ஃபூஸியஸ் மாணவன் தொடர்ந்து சொன்னான்: ""ஆணவம்தான் மனிதர்களிடையே தவறுகளையும் புரிதலற்ற தன்மைகளையும் உண்டாக்குகிறது. சூரியனுக்கு என்ன பொருந்து கிறதோ, அது கடவுளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு தனிப்பட்ட கடவுள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறான். குறைந்தபட்சம், ஒரு தனிக் கடவுள் தன்னுடைய நாட்டிற்காவது இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். உலகத்தில் இல்லாத ஒரு கடவுளை தன்னுடைய ஆலயங்களுக்குள் மட்டும் சொந்தமாக வைத்திருக்க ஒவ்வொரு நாடும் விரும்புகிறது.

ஒரே நம்பிக்கை, ஒரே மதம் என்று அனைத்து மக்களையும் ஒன்றுசேர்த்து கடவுள் தானே கட்டிய ஆலயத்திற்கு இணையாக வேறு எந்த ஆலயத்தையும் ஒப்பிட முடியுமா?

கடவுளின் சொந்த உலகமான அந்த ஆலயத்தை முன்மாதிரியாக வைத்துதான் எல்லா மனித ஆலயங்களும் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் அதற்கென்று இருக்கக் கூடிய அமைப்புகள், அலங்கரிக்கப்பட்ட மேற்கூரை, அதன் விளக்குகள், அதன் ஓவியங்கள் அல்லது சிற்பங்கள், அதன் எழுத்துகள், சட்டம் பற்றிய நூல்கள், அதன் படையல்கள், அதன் பிரார்த்தனை செய்யும் இடங்கள், அதன் துறவிகள்... ஆனால் எந்த ஆலயத்தில் கடலுக்கு ஒத்த அழகு இருக்கிறது? பிரபஞ்சங்களுக்கு நிகரான மேற்கூரை இருக்கிறது? சூரியன், நிலவு, நட்சத்திரங்களுக்கு நிகரான விளக்குகள் இருக்கின்றன? அல்லது வாழ்வதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனிதர்களுக்கு நிகராக ஒப்பிட்டுக் கூறுவதற்கு யார் இருக்கிறார்கள்? மனிதர்கள் சந்தோஷ மாக இருக்க வேண்டும் என்பதற்காக கடவுள் பொழியக்கூடிய ஆசீர்வாதங்ளை எளிதாகத் தெரிந்துகொள்கிற மாதிரி- கடவுளின் கருணை யைக் காட்டும் ஆதாரங்களுக்கு நிகராக வேறெதுவும் இருக்கின்றனவா? ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எழுதப் பட்டிருப்பதற்கு நிகரான- தெளிவான சட்டம் பற்றிய நூல் எங்கு இருக்கிறது?

தன்னலமே இல்லாமல் ஆணும் பெண்ணும் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பிற்கு நிகரான தியாகங்களை எங்கே பார்க்க முடியும்? கடவுளே ஏற்றுக்கொள்ளக்கூடிய தியாகங்களைச் செய்யும் நல்ல மனிதனின்  இதயத்திற்கு நிகராக வேறு எந்த ஆலயத்தை ஒப்பிட்டுக் கூற முடியும்?

ஒரு மனிதனின் கடவுளைப் பற்றிய கற்பனை எந்த அளவிற்கு உயர்ந்ததாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவனுக்கு கடவுளைப் பற்றி நன்கு தெரியும். அவன் எந்த அளவிற்கு கடவுளைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறானோ, அந்த அளவிற்கு அவன் கடவுளை நெருங்கிவர முடியும். கடவுளுடைய நல்ல செயல்களை, அவருடைய கருணையை, அவர் மனிதர்கள்மீது கொண்டிருக்கும் அன்பை அவன் பிரதிபலிக்க முடியும்.


அதனால், உலகத்தையே வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் சூரியனின் முழு ஒளியையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதன், அந்த விளக்கின் ஒரு கீற்றை தான் வழிபடும் சிலையில் பார்க்கும் மூடத்தனமான மனிதனைக் குறை சொல்லவோ ஒதுக்கவோ கூடாது. சொல்லப்போனால்- கண் பார்வை இல்லாத, சூரியனைப் பார்க்க முடியாத, நம்பிக்கையற்ற மனிதனைக்கூட இழிவாக எண்ணக்கூடாது.''


இவ்வாறு சீனாவைச் சேர்ந்த கன்ஃபூஸியஸ் மாணவன் பேசினான். அந்த காபி கடையில் அமர்ந்திருந்த எல்லாரும் மிகவும் அமைதியாக இருந்தார்கள். யாருடைய நம்பிக்கை உயர்ந்தது என்று அவர்கள் அதற்குமேல் விவாதம் செய்து சண்டை போடவே இல்லை

Saturday, September 10, 2011

செவ்வாய் தோஷம் - புதுமைப் பித்தன்

 
செவ்வாய் தோஷம்  - புதுமைப் பித்தன்  


முருக்கம்பட்டிக்கு லோகல் பண்டு ஆஸ்பத்திரிதான் உண்டு. அதாவது சின்னக் காய்ச்சல், தலைவலி, கைகால் உளைச்சல், வெட்டுக்காயம் அல்லது வேனல்கட்டி - இவைகளை மட்டிலுமே குணப்படுத்துவதற்கான வசதி அமைந்தது. கிராமவாசிகள் திடமான தேகமுள்ளவர்களானதால் பட்டணத்துக்காரர்களைப் போல் நாகரிகமான வியாதிகளைப் பெறுவதில்லை. கொய்னாpudu4 மாத்திரம் மத்ய சர்க்காரின் மலேரியா எதிர்ப்பு முயற்சியால் கிராமவாசிகளிடையே இலவச விநியோகத்திற்காக வேண்டிய மட்டிலும் உண்டு.

     டாக்டர் வீரபத்திர பிள்ளை எல்.எம்.பி. அந்தப் பிரதேசத்தின் தேக சௌக்கியத்திற்குப் பொறுப்பாளியல்லரானாலும், கிராமவாசிகள் வருவித்துக்கொள்ளக்கூடிய வியாதிகளைத் தடுக்க முயற்சி செய்யும் பாத்தியதை அவருக்கு உண்டு. 'கைராசிக்காரர்' என்ற அக்கிராமவாசிகளின் பட்டம் அவருடைய வைத்திய கௌரவத்திற்குப் பின்னொளியாக இருந்துவந்தது.

      அவருடைய வைத்தியம் தெரிந்த வியாதிகளுக்கு ராஜ பாதை; அவருக்குச் சிறிது சந்தேகம் தோன்றிவிட்டால் போதும், சாதாரணமானதானாலும் வியாதியஸ்தனை நூறு சதவிகிதம் பயமூட்டையுடன், வண்டி கட்டி, ஜில்லா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவார்.

     கம்பௌண்டர் வெங்கிடசாமி நாயுடு அப்படியில்லை. அவருடைய ஞானம் இரண்டு களஞ்சியங்களில் இருந்தது; ஒன்று, யூனியன் ஜாக் கொடி போட்ட - டாக்டர் பிள்ளையவர்களின் கைக்குள் அடங்கிய - சீமைச் சிகிச்சை; இன்னொன்று, எண்ணற்ற ஓலைச் சுவடிகளிலிருந்து திரட்டப்பட்ட மூலிகை சாஸ்திரம். வியாதியஸ்தனைக் குணப்படுத்துவதைவிட, குறிப்பிட்ட முறையின் தன்மையைப் பரிசீலனை செய்வதில் நெஞ்சழுத்தமுடையவர். ஆயுர்வேத சாஸ்திரத்தில் ஏற்பட்ட அபாரப் பிரேமையின் விளைவே அவருடைய இந்த நெஞ்சழுத்தத்திற்குக் காரணம் என்று சொல்லவேண்டும்.

     முருக்கம்பட்டி ஆஸ்பத்திரியில் பெரும்பான்மையான நாட்களில் குழந்தைகளுக்குப் பேதி மருந்து அல்லது மலச்சிக்கலால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து, இவை தயாரிப்பதிலேயே காலம் கழிந்துவிடும். அதனால் பிணமறுக்கும் கிடங்கின் பூட்டு துருப்பிடித்துச் சிக்கிக் கிடப்பதில் ஆச்சரியமில்லை.

     கிடங்கு, ஆஸ்பத்திரிக் காம்பவுண்டின் கீழ்க்கோடி மூலையில் இருக்கிறது. அன்று ராத்திரி பத்து மணி சுமாருக்கு ஆஸ்பத்திரித் தோட்டியான ராக்கன் வந்து எசமானிடம் கோயிலூரிலிருந்து பிணம் ஒன்று வந்திருப்பதாகச் செய்தி அறிவித்து, சாவியை வாங்கிக் கொண்டு போய்த் திறக்கக் கஷ்டப்பட்டான். முடியாமற்போகவே பூட்டுச்சிக்கெடுக்க டாக்டர் அம்மாளிடம் எண்ணெய் வேறு வாங்கிச் செல்ல வேண்டியதாக இருந்தது.

     கோயிலூர் கி.மு., அந்த வட்டாரத்தில் 'ரவுண்டு வரும்' ஏட்டு கந்தசாமி பிள்ளை - எல்லாரும் அந்தக் கேஸை எடுத்து வந்திருந்தார்கள். கேஸ், கோயிலூர்ப் பள்ளனுடைய பிரேதம். அவர்கள் சொன்ன விபரந்தான் விசித்திரமாக இருந்தது; அது வைத்திய சாஸ்திரத்துக்கு அதீதமானது.

     ரத்தக் காட்டேரி அடித்துவிட்டதால், அந்தப் பள்ளன் மாண்டு போனதாகக் கூறப்படுகிறது.

     இ.பி.கோ.வில் பேயடிப்பதற்குத் தனிப் பிரிவு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டிருந்தும், ஏட்டுப்பிள்ளை கூட வெட்டியான் கூற்றை நம்பி ஆமோதிக்கிறார்.

     டாக்டர் வீரபத்திர பிள்ளைக்குப் பிரேத பரிசோதனையெல்லாம் வைத்தியக் கலாசாலையில் முதல் இரண்டு வருஷங்களில் கற்றுக் கொள்வதற்காக அநாதைப் பிரேதங்களை அறுத்துப் பார்த்ததோடு முடிவடைந்துவிட்டது. பட்டிக்குள் சரணாகதியடைந்த பிறகு அவருக்கு இதுவரை பிரேத பரிசோதனை உத்தியோகம் ஏற்பட்டது கிடையாது. அப்படிப்பட்டவருக்கு இதுமாதிரி விதிவிலக்கான ஒரு கேஸ் சம்பவித்தது ஊர்க்காரர்கள் பொதுப்பகையில் செய்த குற்றத்தை மறைப்பதற்குச் செய்யப்படும் ஒரு முட்டாள்தனமான முயற்சியோ என்று நினைத்தார்.

     கம்பௌண்டர் நாயுடுவுக்கு ஆள் அனுப்பிவிட்டு, "யாருடா அது?" என்ற அதட்டலுடன், பாதக்குறடு சரல்கற்களில் கிரீச்சிட அவர் பிரேதக் கிடங்குக்குச் சென்றார்.

     இவரைக் கண்டதும் ஏட்டு கந்தசாமி பிள்ளை போலீஸ் ஸலாம் செய்து, தமது கேஸ் புஸ்தகத்தை நீட்டிக் கையெழுத்து வாங்கிக்கொண்டு, விலகி நின்றார். "என்ன கந்தசாமி பிள்ளை, பய கதை விடரானே!" என்று சிரித்தார் டாக்டர்.

     "பேய் பிசாசு இல்லை என்று சொல்ல முடியுமா?" என்றார் கந்தசாமிபிள்ளை.

     "பயந்தான் பேய். ரிப்போர்ட்லெ பேயடிச்சதுன்னு எழுதி வையாதியும், சிரிச்சுத் துப்பப்போறான்!" என்றார் டாக்டர்.

     "நீங்கள்தான் முகத்தைப் பாருங்களேன்! அப்பந் தெரியும் - ஏலே வெட்டியான், அந்தச் சாக்கெ விலக்கடா!" என்று உத்தரவு போட்டார் கந்தசாமி பிள்ளை.

     டாக்டர், கையில் அரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, குனிந்து பிரேதத்தைப் பார்த்தார்.

      கண் பிதுங்கி வெளியே தள்ளிக்கொண்டிருந்தது. சொல்ல முடியாத பயத்தில் முகத்தை வார்ப்பு எடுத்த மாதிரி அவ்வளவு கோரம்! கிட்டிப்போன பற்களுக்கிடையில் நாக்கு வெளியே தள்ளிக் கிடந்தது. பல் நாக்கில் பதிந்து விறைத்துக் கொண்டதால் வாயை அகற்றிக்கூட நாக்கை உள்ளே தள்ள முடியாது.

     "சாக்கை அப்புறம் எடுத்தெறி!" என்றார் டாக்டர்.

     பிரேதம் ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்தது. முதுகில் பலத்த அறை விழுந்ததால் அதைத் தேக்குவதற்காக உடம்பை வளைத்த பாவனையில் வளைந்துவிறைப்பேறிக் கிடந்தது. கை விரல்களும் வக்கிரமாக முறுக்கிக் கிடந்தன.

     "சரி, உள்ளே எடுத்துக்கொண்டு போய் மேஜையிலே கெடத்துங்கடா!" என்று சொல்லி நிமிர்ந்தார் வைத்தியர்.

     "உடம்பில் கோறை ஒன்றையும் காணவில்லை. ஆனால் அடிக்குக் குனிந்த மாதிரிக் கிடக்கிறது" என்று ஏட்டைப் பார்த்தபடியே கூறினார்.

     அச்சமயம் இருட்டில் ஓர் உருவம் தெரிந்தது. "அதாரது?" என்ற குரலுக்கு, "நான் தான் நாயுடு!" என்று சொல்லிக்கொண்டே கம்பௌண்டர் அருகில் வந்தார்.

     "பேயடிச்ச கேஸ்கூட நம்ம ஆஸ்பத்திரிக்கு வருதுவே!" என்று சிரித்தார் டாக்டர் வீரபத்திர பிள்ளை.

     "பேயா, அடிச்சா சாகத்தான்! இரண்டு மூன்று நாளாக இந்தப் பக்கம் ஒரு ரத்தக் காட்டேரி தெரிகெட்டுப்போய் அலையிது. அதாத்தானிருக்கும்!" என்றார் நாயுடு.

     "நீரும் பேயை நம்புறீரா - உருப்பட்டாப்லேதான்!" என்று சொல்லி, டாக்டர், "ஏலே இன்னுமா - எத்தினி நேரம், சவத்தெ இளுத்துக் கெடத்த?" என்று அதட்டினார்.

     "வே, கந்தசாமி பிள்ளை, நம்ம தோட்டி பாத்துக்கிடுவான் - நீங்க வேணும்னா ஆஸ்பத்திரி வெராண்டாவுலே படுத்துக்கிடுங்க - காலையிலே வேலையைச் சுருக்கா முடிச்சுடுவோம்!" என்று சொல்லிக் கொண்டே ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்கு எதிரில் உள்ள தமது வீட்டிற்குப் புறப்பட்டார்.

     "ஸார், ஒரு நிமிசம், நான் ஒரு பார்வை பார்த்துப்புட்டு வந்திருதேன்!" என்றுகொண்டே உள்ளே நுழைந்தார் கம்பௌண்டர் நாயுடு.

     டாக்டர் சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றார்.

     உள்ளே சென்ற கம்பௌண்டர் நாயுடு சிறிது நேரத்தில் விறைக்க விறைக்க ஓடிவந்தார்.

     "வெட்டியான் சொல்லுறதில் அணுவளவு சந்தேகமில்லெ; ரத்தக் காட்டேரிதான்!" என்றார் நாயுடு.

     "உமக்கும் என்ன பைத்தியமா? வேறெ வேலெ இருந்தாப் போய்ப் பாரும்!" என்று அதட்டினார் டாக்டர்.

     "இப்பவே வேணும்னா அறுத்துப் பாருங்க! நான் சொல்லுறது சரியா தப்பா என்று தெரியும்" என்றார் நாயுடு.

     "பார்க்க வேண்டியது உமது மூளைக்குத்தான் வைத்தியம்!" என்று சொல்லிக்கொண்டே மேல் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, கைகளைத் தோளுக்கு மேல் உயர்த்தி சுடக்கு முறித்துக் கொட்டாவி விட்டார் டாக்டர். 

       "நீங்க எங்கூட ஷெட்டுக்குள் வாருங்க, காண்பிக்கிறேன்!" என்று தமது கட்சியை நிரூபிக்க அவசரப்பட்டார் கம்பௌண்டர்.

     "என்னதான் சொல்லுமே!"

     "நீங்க வாருங்க, ஸார்!" என்று ஷெட்டுக்குள் நுழைந்து, பிணத்தின் மீது கிடந்த சாக்கை அகற்றினார் கம்பௌண்டர்.

     "டேய் தோட்டி! விளக்கைக் கொஞ்சம் ஒசத்திப் பிடி!" என்று சொல்லி, மடியிலிருந்து சூரிக்கத்தி ஒன்றை எடுத்தார்.

     அவர் என்னதான் காட்டப் போகிறார் என்பதைப் பார்க்க ஷெட் வாசலில் நின்றுகொண்டிருந்த டாக்டர், "என்னவே வேலை!" என்று சொல்லுமுன், பிணத்தின் கையில் கத்தியைக் குத்திக் கிழித்து, மாங்காயைப் பிளந்து காட்டுவதைப்போல், காயத்தை விரித்துப் பிடித்துக் காண்பித்து, "இதில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கிறதா பாருங்கள்!" என்றார்.

      "ரத்தம் இருந்தாலும் பிணமான பின் வடிவதை எங்கே கண்டீர்?" என்றுகொண்டே நெருங்கினார் டாக்டர்.

     "ரத்தம் வடியாது, உறைந்தாவது இருக்க வேண்டுமே! எங்கே பாருங்கள்?" என்றார் நாயுடு.

     டாக்டர் குனிந்து பரிசோதித்துப் பார்த்தார். ரத்தத்தை வடிகட்டிப் பிழிந்தெடுத்த சதைபோலக் கிடந்தது பிணம்.

     டாக்டர் வேறு ஓர் இடத்தில் பரிசோதிக்கும்படி கூறினார். அங்கும் அப்படியே இருந்தது. டாக்டருக்குப் புல்லரித்தது.

     "அப்புறம்!" என்றார். அவருடைய நாக்கு மேல்வாயில் ஒட்டிக்கொண்டது.

     "வாருங்க, போவோம்!" என்று வெளியே வந்த கம்பௌண்டர், "இவன் ரத்தம் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டுமா?" என்றார். "கோயிலூர்க் கணியான் செத்துப் போனானே அவனைப் பொதைக்கத்தானே செய்தார்கள்?" என்று கேட்டார் தோட்டியிடம்.

     "ஆமாஞ் சாமி! அங்கனெதான் இவனும் மாட்டிக்கிட்டான்!" என்றான் தோட்டி ராக்கன்.

     "எப்படா நடந்தது?"

     "சாயங்காலம் சாமி!"

     "வருகிறீர்களா, போவோம்?" என்றார் கம்பௌண்டர்.

     "அவ்வளவு நிச்சயமா உமக்கு? அப்படியானாப் போவோம்!" என்றார் டாக்டர்.

     "ஏட்டுப்பிள்ளையையும் கூட்டிக்கொள்ளுவோம், ஏலே ராக்கா, மம்பட்டியை எடுத்துக்கிட்டு கூட வா!" என்றார் நாயுடு.

     "நான் வரமாட்டேன் சாமி, எனக்குப் புள்ளை குட்டியில்லே!" என்றான் ராக்கன்.

     "நாங்க இருக்கறப்ப என்னடா பயம்? சும்மா வா, ஒண்ணும் நடக்காது!" என்று தேற்றினார் கம்பௌண்டர்.


   2
     இந்தப் பரிசோதனைக் கோஷ்டி கோயிலூர் பள்ளர் சுடுகாட்டை அடையும்போது மணி பன்னிரண்டு.

     வானத்திலே துளி மேகங்கூடக் கிடையாது. நிலவொளியும் இல்லை, வெறும் நட்சத்திரப் பிரகாசம்தான்.

     சுடுகாடு ஆற்றங்கரையிலிருந்தது. அது ஒரு வெட்டவெளி. நாலைந்து பர்லாங்குக்கப்புறந்தான் அந்தப் பகுதியில் மரம் என்ற பேருக்கு ஒன்றிரண்டு பனை முளைத்துக் கிடந்தது.

     "எங்கடா அவனைப் பொதெச்சாங்க?" என்று அதட்டினார் டாக்டர். தம்மை இழுத்தடிக்கிறானே அந்தக் கம்பௌண்டர் என்று அவருக்கு நினைப்பு.

     "அதோ, அந்தக் குத்துக்கல் தெரியுதே அதுதான் சாமி!" என்றான் ராக்கன். அவன் சொல்லி வாய் மூடவில்லை...

     நாயின் ஊளை போல ஆரம்பித்த ஒரு சப்தம் கணநேரத்துக்கு நேரம் சுருதி கூடி, ஆந்தையின் அலறலாக மாறி, வெறும் பேய்ச் சிரிப்பாக வானமுகட்டைக் கிழித்தது.

     கடகடவென்று விக்கி விக்கிச் சிரிப்பது போன்ற அலறல் ஒரு கணம் வானத்தையே நிறைத்தது.

     அடுத்த கணம் அமைதி.

     அதே பேய் அமைதி!

     நடந்து கொண்டிருந்தவர்கள் யாவரும் தரையுடன் தரையிட்டது மாதிரி கல்லாய் உறைந்துநின்றனர்.

     "சாமி, நான் வரமாட்டேன், பேய்!" என்று ஓட்டம் பிடித்தான் ராக்கன்.

     மண்வெட்டி, ஓடிய வேகத்தில் அவன் கைவிட்டு நழுவியது. அதை எடுத்துக்கொள்ள அவன் தாமதிக்கவில்லை.

     "நாய் ஊளையிட்ட மாதிரி இருந்துதல்ல!" என்றார் ஏட்டுப்பிள்ளை.

     "சுடுகாட்டில் நாய்க்கா பஞ்சம், அது நாயில்லை!" என்றார் கம்பௌண்டர்.

     மூவரும் அந்தக் கணியானைப் புதைத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

     கம்பௌண்டர் நாயுடு விளக்கை உயர்த்திப் பிடித்துக் கொள்ள, ஏட்டுப்பிள்ளை தைரியமாக வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார்.

     ஆற்றருகில் உள்ள இடந்தானே, வேலை சுளுவாக நடந்தது.

     "அதோ வெள்ளையா என்னமோ தெரிகிறது!" என்றார் கம்பௌணடருடன் ஒண்டிக்கொண்டிருந்த டாக்டர்.

     ஏட்டுப்பிள்ளை மண்வெட்டியைக் குழிக்கு வெளியில் எறிந்துவிட்டு, கைகளால் மண்ணைப் பரசி எடுக்க ஆரம்பித்தார். கம்பௌண்டரும் கையிலிருந்த விளக்கை டாக்டரிடம் கொடுத்துவிட்டு, உள்ளே இறங்கி, துணியின் முனையைப் பிடித்து இழுத்துத் தூக்கவே பிரேதம் தென்பட்டது.

     டாக்டர் குழிக்குள் விளக்கைப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்த்தார்.


     பிரேதம், கைக் கட்டு, கால்விரல் கட்டு, வாய்க் கட்டுகளுடன் மலத்திக் கிடத்தப்பட்டிருந்தது.

     புதைத்து நான்கு நாட்களாகியும் நெற்றியிலிருந்த சந்தனமும் குங்குமமும் அழியவில்லை. கழுத்தில் கிடந்த மாலை வாடவில்லை. பிரேதம்போல் கட்டப்பட்டு ஒருவன் படுத்துத் தூங்குவது போலவே தென்பட்டது.

     "அவன் எமை ஆடுது!" என்று அலறிக் கொண்டே விளக்கை நழுவவிட்டார் டாக்டர்.

     நல்ல காலம், கம்பௌண்டர் அதை ஏந்திக் கொண்டார்.

     பிரேதத்தின் வலது இமை ஆடியது. யாவரும் அதையே பார்த்து நின்றார்கள்.

       பிணம் எழுந்து உட்கார்ந்து பேசும் என்று எதிர்பார்ப்பது போலிருந்தது அவர்கள் பார்வை.

     வலது கண் இமைகள் மெதுவாக அசைந்தன. உள்ளிருந்து சிரமப்பட்டு ஒரு கருவண்டு வெளியே வந்தது. வெளிச்சத்தைக் கண்டு திகைத்தது போலத் தள்ளாடியது. பிறகு சிறகை விரித்து உயரப் பறந்து சென்றது.

     "வண்டுகளைப் போல அது ரீங்காரமிடவில்லை, பார்த்தீரா?" என்றார் நாயுடு.

     வண்டு போனதையே பின்பற்றிய கண்கள் அதை இருளில் இழந்தன.

     "இதோ பாருங்கள்!" என்று பிரேதத்தின் வலது கரத்தைக் கத்தியால் கிழித்துக் காயத்தை விரித்துப் பிடித்தார் நாயுடு.

     புது ரத்தம் குபுகுபு என்று பொங்கி அவர் விரல்களை நனைத்தது!

    *****

     மூவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

     "ரிப்போர்ட் எப்படி எழுத?" என்று கைகளை மணலால் தேய்த்துக்கொண்டே கேட்டார் ஏட்டுப்பிள்ளை. தன் கையில் ரத்தம் பட்டதுபோல அவ்வளவு பிரமை.

     "பயத்தால் மரணம் என்று எளுதிப்புடும்!" என்றார் கம்பௌண்டர்.

     "நாயுடு, இது எப்படித் தெரிந்தது?" என்றார் டாக்டர்.

     "அவன் ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குச் செவ்வாய் தோஷம்; அந்த ஜாதகமெல்லாம் ரத்தக் காட்டேரிதான்!" என்றார் கம்பௌண்டர்.
********
சூறாவளி - 09-07-1939